2017-05-17 15:37:00

ஹாங்காங் இளையோருடன் கர்தினால் பால்திசேரி


மே,17,2017. எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் பொறுப்பு, பல்கலைக்கழகங்களைச் சாரும் என்றும், இன்றையச் சூழலில், பல்கலைக்கழகங்களில், நன்னெறி விழுமியங்கள் குறித்த எதிர்மறை போக்குகள் நிலவிவருவது, கவலை தருகிறது என்றும், வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச் செயலராக பணியாற்றும், கர்தினால் லொரென்சோ பால்திசேரி அவர்கள், ஆசியாவின் ஹாங்காங், மற்றும் தைபேயி (Taipei) நகரங்களில் மேற்கொண்டு வரும் ஒருவார பயணத்தின் ஒரு பகுதியாக, ஹாங்காங் இளையோரை அண்மையில் சந்தித்தபோது, இவ்வாறு கூறினார்.

நற்செய்தியின் விழுமியங்களைக் கொண்டு எழுப்பப்படும் ஒவ்வொரு கிறிஸ்தவக் குடும்பமும் உண்மையான மகிழ்வை உலகிற்கு பறைசாற்றும் ஒப்பற்ற அருளடையாளங்கள் என்று கர்தினால் பால்திசேரி அவர்கள், இளையோரிடம் எடுத்துரைத்தார்.

இளையோரை மையப்படுத்தி, அடுத்த ஆண்டு, வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றம் குறித்தும், குடும்பங்களை மையப்படுத்தி திருத்தந்தை எழுதியுள்ள 'அன்பின் மகிழ்வு' என்ற திருத்தூது அறிவுரை மடலைக் குறித்தும் பேசுவதற்கு, கர்தினால் பால்திசேரி அவர்கள், இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.