2017-05-08 16:40:00

பிலிப்பின்ஸ் கத்தோலிக்க குழுக்களுக்கு பாராட்டு


மே,08,2017. போதைப்பொருளுக்கு எதிராக, பிலிப்பின்ஸ் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன என்பது குறித்து உலகுக்கு வெளிப்படுத்திய கத்தோலிக்க குழுக்களுக்கு அந்நாட்டின் மனித உரிமைகள் அமைப்பு, தன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.

மனித உரிமை மீறல்கள் குறித்து கண்காணித்த கத்தோலிக்கக் குழுக்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஒவ்வொன்றும், மன உறுதி, ஒருமைப்பாடு, நீதி, மற்றும் இரக்கத்தை வெளிப்படுத்தும் செயல்களாக விளங்கியதோடு மட்டுமல்லாமல், இருள் நடுவே ஒளியை வழங்குபவைகளாகவும் இருந்தன என்று, பிலிப்பின்ஸ் மனித உரிமைகள் அமைப்பு பாராட்டியுள்ளது.

போர்க்கால அடிப்படையில், போதைப்பொருளுக்கு எதிராக, பிலிப்பின்ஸ் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உலக மீட்பர் துறவு சபை ஆற்றிய பணிகளையும், இவ்வமைப்பு குறிப்பாக பாராட்டியுள்ளது.

2016ம் ஆண்டு ஜூன் மாதம் பொறுப்பேற்ற அரசுத் தலைவர் ரொட்ரிகோ துத்தெர்த்தே அவர்கள் துவக்கி வைத்த போதைப்பொருளுக்கு எதிரான போர் தொடர்பாக, குறைந்தது, 8000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக, செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.