2017-05-05 15:51:00

பாசமுள்ள பார்வையில் - தாய் சொல்லின் வல்லமை


வெளியூரில் வேலை தேடப் புறப்பட்ட தன் ஒரே மகனை ஆசீர்வதித்து, வழிப்பயணத்துக்காக மகனின் பையில் சில ரொட்டித் துண்டுகளை வைத்தார் அம்மா. பிறகு மகனிடம், அன்பு மகனே, இந்த ரொட்டித் துண்டுகளை உனக்காக மட்டுமே என நீ வைத்துக் கொள்ளாதே. பசி என்று யார் உன்னிடத்தில் வந்தாலும், அவர்களுக்கு நீ இவற்றில் சிறிது கொடு. அவை ஒருபோதும் குறையாது. நீ இந்த ரொட்டித் துண்டுகளை யாருக்கும் கொடுக்காமல், நீ மட்டும் எப்போது உண்கிறாயோ, அப்போது இவை வேகமாகக் குறைந்து விடும் என்ற அறிவுரையையும் சொன்னார் அம்மா. ஆகட்டும் எனச் சொல்லிப் புறப்பட்டான் மகன். வழியில் பசிக்கின்றது என்று யார் வந்தாலும், அவன் தன்னிடம் இருந்த ரொட்டித் துண்டுகளைப் பகிர்ந்து கொடுத்து உண்டான். இதனால் அவனிடம் இருந்த ரொட்டித் துண்டுகள் குறையாமல் பெருகிக் கொண்டே இருந்தன. இதற்கிடையில், அந்நாட்டு அரசர் தனது மகளுக்கு வரன் தேடினார். தன்னிடம் இருந்த பொன் நகைகளை எல்லாம் ஒரு பெரிய தராசின் ஒரு தட்டில் வைத்து, இன்னொரு தட்டில் அதற்கீடாக பொன் நகைகளை வைப்பவருக்கு, தனது மகளை மணமுடித்துத் தருவதாக அறிவித்தார். அரசரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பக்கத்து நாடுகளின் இளவரசர்கள் எல்லாம் தங்களிடம் இருந்த பொன் நகைகளை, தராசின் அடுத்த தட்டில் வைத்தார்கள். ஆனால் யாருடைய பொன் நகைகளும், அரசர் வைத்த நகைகளுக்குச் சரிசமமாக இல்லை. இதனால் கவலையடைந்த இளவரசி, அரண்மனைக்கு அருகிலிருந்த ஆற்றங்கரைக்குப் போனார். அங்கே, வேலை தேடிவந்த அந்த இளைஞன், தன்னிடம் இருந்த ரொட்டித் துண்டுகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவன் தன்னிடமிருந்த ரொட்டித் துண்டுகளை இளவரசிக்குப் பகிர்ந்து கொடுத்து உண்டான். அவளும் அதை அன்போடு வாங்கிச் சாப்பிட்டார். அடுத்த நாள் பொழுது விடிந்தபோது இளைஞன், ஆற்றங்கரையை விட்டு சந்தைவெளிக்குச் சென்றான். அப்போது அரசரின் அந்த அறிவிப்பு பற்றிக் கேள்விப்பட்டான். அரசரிடம் சென்று, தானும் அந்தப் போட்டியில் கலந்து கொள்வதாகச் சொன்னான் இளைஞன். அவனின் நிலையைப் பார்த்து சற்றுத் தயங்கிய அரசர், பின் போட்டிக்குச் சம்மதித்தார். அந்தத் தராசின் அடுத்த தட்டில், தான் வைத்திருந்த ரொட்டித் துண்டுகளில் ஒன்றை எடுத்து வைத்தான் இளைஞன். சிறிது நேரத்தில் அந்த ரொட்டித்துண்டு பொன் நகையாக மாறியது. அதோடு, அது அரசர் வைத்த பொன் நகைகளின் எடையை விடவும் அதிகமாக இருந்தது. இதைப் பார்த்த எல்லாருக்கும் வியப்பு. அப்போது, அந்த இளைஞன், “இது சாதாரண ரொட்டி துண்டு கிடையாது, பசியாய் இருப்பவர்க்கு எவ்வளவு கொடுத்தாலும் குறையாத ரொட்டித்துண்டு, அதனால்தான் இந்த அற்புதம் நிகழ்ந்தது”என்றான். அந்த இளைஞனுக்கு தனது மகளை மணமுடித்துக் கொடுத்தார் அரசர். அன்றிலிருந்து பசியாய் வந்த அந்நாட்டு மக்களின் தேவைகளையும் நிறைவேற்றினார் அரசர்.

தன் பிள்ளைகளை நற்பண்புகளில் வளர்ப்பவர் தாய்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.