2017-05-01 15:23:00

பாசமுள்ள பார்வையில்.. ஒரு தாயின் எதிர்பார்ப்பு


ஒரு தாய் தன் மகனுக்கு எழுதும் கடிதமாக, karampon என்ற இணைய பக்கத்தில் பதிவாகியிருந்த வரிகள் இதோ...

எனதருமை மகனே!, நான் உன்னை மிகவும் அன்புகூர்கின்றேன். முதுமையின் வாசலில் நான் முதலடி வைக்கையில், தள்ளாட்டம், என்மீது வெள்ளோட்டம் பார்க்கும்... கொஞ்சம் பொறுமை கொள்! அதிகம் புரிந்துகொள்!

நான் சாப்பிடுகையில் கை நடுங்கி சாதம் சிந்தி விட்டேனா? சத்தம் போடாதே... உனக்கு நான் நிலாச்சோறு ஊட்டிய நாள்களை நினைத்துப்பார்!

என் முதுமை பார்த்து முகம் சுளிக்காதே! ஆடை மாற்றுகையில் அவதிப்படுகிறேனா? அசுத்தம் செய்து விட்டேனா? ஆத்திரப்படாதே.....படுக்கை முழுதும் நீ செய்த ஈரங்களின் ஈர நினைவுகளை இதயத்தில் நிறுத்து!

ஒரே பேச்சை, கீறல் விழுந்த ஒலிநாடா போல் ஓயாமல் சொல்கிறேனா? சலித்துக் கொள்ளாதே.... ஒரே மாயாவிக் கதையை, ஒரு நூறு முறை என்னைப் படிக்கச் சொல்லி நீ உறங்கிய இரவுகளை நினைவில்கொள்!

நான் குளிக்க மறுக்கிறேனா? சோம்பேறித்தனம் என்று சுடுசொல் வீசாதே.... உன்னை குளிக்க வைக்க நான் செய்த யுக்திகளை எனக்காகப் புதுப்பித்துக் கொள்!

புதிய தொழில்நுட்பம், புதிய பயன்பாடுகள், உன் புயல்வேகப் புரிந்துகொள்ளல், சத்தியமாய் எனக்குச் சாத்தியமில்லை! கேவலப்படுத்தாதே..கற்றுத்தா! கவனித்துப் பழக அவகாசம் தா!

இனி, சில காலத்தில், மூப்பினால், என் நினைவுகள் அறுந்து போகலாம், உரையாடல் உடைந்து போகலாம்! நிறைய வேலை இருக்கிறதென்று நேரம் பார்க்காதே..... என் அருகிருந்து ஆசுவாசப்படுத்து!

என் கால்கள் என்னை ஏமாற்றுகையில், நீ முதல் நடை பழக, என் விரல் நீண்டது போல், கைகொடுத்து எனக்கு உதவி செய்!

ஒரு நாள் சொல்வேன் நான், வாழ்ந்தது போதுமென்று! வருத்தப்படாதே.....சில வயதுவரை வாழ்க்கைக்கு அர்த்தமில்லை... சில வயதுக்குமேல் வாழ்வதில் அர்த்தமில்லை... காலம் வரும்போது, நீயும் இதைப் புரிந்து கொள்வாய்!

இனி நான் வேண்டுவதெல்லாம் நீ எனைப் புரிந்துகொண்ட புன்னகையே!

மீண்டும் மீண்டும் சொல்கிறேன், எனதருமை மகனே! நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்..... என் வாழ்வு அமைதியோடும், உன் அரவணைப்போடும் முற்றுப்பெற முயற்சியேனும் செய்வாயா?

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.