2017-04-27 13:59:00

பாசமுள்ள பார்வையில்.. வாழ்க்கைப் பாடம் கற்றுத்தருபவர் தாய்


அசோக், என்றும் இல்லாமல், அன்று காலையில் அவன் தாமதமாக எழுந்தான். வேக வேகமாகக் கிளம்பி சைக்கிளில் பயணப்பட்டபோது டயர்களில் காற்று வெடித்து விட்டது. இப்படிப்பட்ட அவசரத்திற்கு என்று, அப்பா கொடுத்திருந்த பணம் அன்று பார்த்து அவனுடைய பென்சில் பெட்டியில் இல்லை. எரிச்சலை அடக்கிக் கொண்ட அசோக் சைக்கிளை உருட்டிக் கொண்டே, இருபது நிமிடம் தாமதமாகப் பள்ளியை அடைந்தான். பள்ளியின் கதவுகள் மூடப்பட்டு விட்டன. காலை நேரப் பிரார்த்தனைக் கூட்டம் முடிந்தவுடன் பள்ளிக்கு வெளியே வந்த தலைமை ஆசிரியர் தாமதமாக வந்த மாணவர்கள் அனைவரையும் கண்டித்து உள்ளே அனுப்பினார். அப்பாடி.. என்று பெருமூச்சு விட்ட அசோக் விரைவாக வகுப்பறைக்குள் சென்றான். ஆனால் அவன், நேற்று பாடுபட்டுச் செய்த வீட்டுப் பாடங்களை வீட்டிலேயே மறந்து வைத்து விட்டு வந்து விட்டான். அதனால் அவனை, கணக்கு ஆசிரியர் வாசலில் முழங்கால் போட வைத்தார். மற்ற மாணவர்கள் அன்று முழுவதும் அசோக்கை கிண்டலடித்துச் சிரித்தார்கள். மாலையில் காற்று இல்லாத சைக்கிளைத் தள்ளிக் கொண்டு சோர்வாக வீடு திரும்பினான் அசோக். அவனுக்காகக் காத்திருந்த தாயைப் பார்த்ததும், ஓடிப்போய் அவரைக் கட்டிக் கொண்டு அழுதான். அவன் தலையை ஆதரவாகக் கோதிய தாய், “முதலில் வந்து சாப்பிடு அசோக், சாப்பிட்டதும் உனக்கும் தெம்பு வரும்”என்று, அவனை உணவு உண்ண அழைத்துச் சென்றார். சாப்பிட்டுக் கொண்டே, அன்று நடந்தவற்றை அழுகையுடனே சொல்லி முடித்தான் அசோக். அவன் அழுது முடிக்கும்வரை காத்திருந்த அவனுடைய தாய், பிறகு இவ்வாறு சொன்னார். “அசோக், நமக்குத் துன்பம் வரும்போது அதை ஒரு சோதனையாக எடுத்துக் கொள்ள வேண்டும். துக்கத்தில் துவண்டுவிடக் கூடாது. சோதனையில் பாடங்கள் படிப்பவனே அறிவாளி. உனக்கு இன்று ஏற்பட்ட அனுபவங்கள், என்றாவது ஒருநாள், நல்ல முறையில் உனக்குப் பயன்படும்”என்று அவனைத் தேற்றி விளையாட அனுப்பினார் தாய்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.