2017-04-26 15:42:00

பாசமுள்ள பார்வையில்.. துன்பத்திலும் நன்மையைக் கண்ட தாய்


அந்தப் பள்ளியின் பேருந்து, பிள்ளைகளை அழைத்துச் செல்வதற்காக காலை ஏழரை மணிக்கெல்லாம் அந்தத் தெருவுக்கு வந்துவிடும். அன்றும் அந்தப் பேருந்து வந்து நின்றது. தாய் ஒருவர் தனது மூன்று வயது மகளை அதிகாலையிலே தூக்கத்திலிருந்து எழுப்பி, குளிக்க வைத்து, காலை உணவு கொடுத்து பள்ளிச் சீருடை உடுத்தி பள்ளிப் பேருந்து நிற்குமிடத்திற்கு அழைத்து வந்தார். பேருந்தில் ஏற்றிவிட படியருகில் சிறுமியுடன் வந்தார் தாய். அந்நேரத்தில், நிலை தடுமாறிவந்த மற்றொரு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி அந்தச் சிறுமி அந்த இடத்திலேயே இறந்துவிட்டார். கண்மூடி கண் திறப்பதற்குள், தாயின் கண்முன்னே இது நடந்தது. இந்த விபத்தைப் பார்த்து கண்ணீர் சிந்தாதவர்களே இல்லை. அந்தச் சிறுமி, அந்தத் தாய்க்கு ஒரே பிள்ளை. ஓரிரு நாள்கள் சென்று, அந்தத் தாய்க்கு ஆறுதல் சொல்வதற்காக பள்ளியிலிருந்து சில ஆசிரியர்கள் சென்றனர். ஆசிரியர்கள் கூறிய ஆறுதல் வார்த்தைகளை மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்த அந்தத் தாய், அவர்களிடம் இவ்வாறு சொன்னார். எனது ஒரே பிள்ளையை இழந்துவிட்டேன். ஆயினும், இந்த விபத்தை நினைத்து கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். ஏனென்றால், இந்த விபத்தால் இப்பொழுது பள்ளிப் பேருந்துகளுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் வாழ்வு காப்பாற்றப்பட்டுள்ளது. கடவுள் என் குழந்தை வழியே பல குழந்தைகளுக்கு நல்வாழ்வு அளித்துள்ளார்.

ஆம். துயரத்திலும் நன்மையைக் கண்டார் அந்தத் தாய். இறைவன் வடித்த ஓவியங்களுள் அம்மா என்ற இடத்தை நிரப்ப வேறு யாரும் உள்ளனரோ?

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.