2017-04-25 17:01:00

உத்தர பிரதேச ஆயர்கள், முதலமைச்சர் சந்திப்பு


ஏப்.25,2017. இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் ஏழு ஆயர்களும், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு, சிறுபான்மை கிறிஸ்தவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் சமர்ப்பித்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலத்தின் புதிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களுக்கு, தங்களின் செபங்களை உறுதி செய்ததோடு, சிறுபான்மை கிறிஸ்தவர்களும், அவர்களின் வழிபாட்டுத் தலங்களும், நிறுவனங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இச்சந்திப்பு குறித்து ஆசியச் செய்தியிடம் பேசிய, லக்னௌவ் ஆயர் Gerald John Mathias அவர்கள், யோகி ஆதித்யநாத் அவர்கள், மதமாற்றத்திற்கு எதிரானவர், ஆயினும், ஆண்டவர் இயேசு பற்றி தொடர்ந்து பேசுங்கள் எனக் கூறினார் என்றார்.

ஏனைய மதங்களை மதித்து, அனைவரோடும் நல்லிணக்கத்தில் வாழுமாறும், யோகி ஆதித்யநாத் அவர்கள் கூறினார் எனவும், லக்னௌவ் ஆயர் தெரிவித்தார்.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில், இம்மாதம் 7ம் தேதியன்றும் ஒரு கிறிஸ்தவ சபை ஆலயம் தாக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.