2017-04-22 15:10:00

பாசமுள்ள பார்வையில் - தகுதி கருதி வருவது, இரக்கம் அல்ல


பேரரசன் நெப்போலியனிடம் ஒருநாள், வயதான ஒரு தாய், கலங்கிய கண்களுடன் வந்து சேர்ந்தார். படைவீரனான தன் மகன் மீது, பேரரசன் நெப்போலியன் கருணை காட்டவேண்டும் என்று அவ்வீரனின் தாய் மன்றாடினார். பேரரசன் அத்தாயிடம், "உங்கள் மகன் இரண்டாம் முறையாக மிகப்பெரியத் தவறு செய்துள்ளான். எனவே, அவனுக்கு மரண தண்டனை தருவதே நீதி," என்று கூறினார். அத்தாய் உடனே, பேரரசன்முன் மண்டியிட்டு, "நான் உங்களிடம் கேட்பது, நீதியல்ல அரசே! நான் கேட்பது, இரக்கமே!" என்று கூறினார். உடனே பேரரசன், தாயிடம், "அவன் இரக்கம் பெறுவதற்குத் தகுதியற்றவன்" என்று கூறினார். அத்தாய் மன்னரிடம், "தகுதி கருதி வருவது இரக்கம் அல்ல. தகுதி இருந்தாலும், இல்லாவிட்டாலும், வெளிப்படுவதுதான் இரக்கம். அந்த இரக்கத்தையே நான் உங்களிடம் கேட்கிறேன்!" என்று மன்றாடினார். சிறிது நேர அமைதிக்குப் பின், பேரரசன் நெப்போலியன் அத்தாயிடம், "நீங்கள் கேட்ட இரக்கத்தை தருகிறேன். உங்கள் மகனை அழைத்துச் செல்லுங்கள்!" என்று கூறினார்.

தகுதி, தரம் பார்க்காமல், தயக்கம் ஏதுமில்லாமல், இரவெல்லாம் இறங்கிவரும் பனிபோல, நம் உள்ளங்களை நனைப்பதே இரக்கம். அதிலும் சிறப்பாக, தகுதியற்றவர்களை, தவறி வீழ்ந்தவர்களைத் தேடி, மடைதிறந்த வெள்ளமெனப் பாய்ந்து வருவதே, இறை இரக்கத்தின் இலக்கணம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.