2017-04-21 16:13:00

எருசலேம் நகர், இறைவனின் இல்லம் என்ற மதிப்பை இழந்துவிடும்


ஏப்.21,2017. எருசலேம் நகரின் உலகளாவிய பண்பை நிலைநாட்ட வேண்டுமெனில், அந்நகரில் கிறிஸ்தவக் கோவில்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று, எருசலேம் இலத்தீன் வழிபாட்டு முறை அப்போஸ்தலிக்க நிர்வாகி, பேராயர் Pierbattista Pizzaballa அவர்கள், இஸ்ரேல் அரசுத் தலைவர் Reuven Rivlin அவர்களிடம் கூறினார்.

இலத்தீன் வழிபாட்டு முறை சமுதாயத்திற்கு உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துக்களைக் கூறும் வண்ணம், இஸ்ரேல் அரசுத்தலைவர் Rivlin அவர்கள், ஏப்ரல் 19, இப்புதனன்று இலத்தீன் வழிபாட்டு முறை தலைமையகத்திற்குச் சென்றதை, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ளது.

கிறிஸ்தவர்களின் இருப்பு, எருசலேம் நகரின் மிக முக்கிய அம்சம் என்பதை இச்சந்திப்பு நிகழ்வில் வலியுறுத்திய பேராயர் Pizzaballa அவர்கள், கிறிஸ்தவர்களின் இருப்பு இல்லையென்றால், எருசலேம் நகர், இறைவனின் இல்லம் என்ற மதிப்பை இழந்துவிடும் என்று எடுத்துரைத்தார்.

எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரயேல் மக்களை இறைவன் விடுவித்தார் என்பதைக் கொண்டாடும் பாஸ்காத் திருவிழாவை, பல்வேறு அடக்கு முறைகளிலிருந்து விடுவிக்கும் உயிர்ப்புத் திருநாளாக, கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர் என்று, பேராயர் Pizzaballa அவர்கள், அரசுத்தலைவர் Rivlin அவர்களிடம் கூறினார்.

கிறிஸ்தவர்களும், யூதர்களும் இணைந்து ஒரு குடும்பமாக, எதிர்காலத்தை உருவாக்குவதே தன் கனவு என்று, இச்சந்திப்பில் கூறிய இஸ்ரேல் அரசுத்தலைவர் Rivlin அவர்கள், எகிப்திலும், சீனாய் மலை, புனித கத்தரீனா மடத்திலும் நிகழ்ந்த தாக்குதல்களுக்கு தன் கண்டனத்தை வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.