2017-04-21 15:50:00

அமைதிக்கு அழைத்துச் செல்லும் சிறந்த தலைவர், திருத்தந்தை


ஏப்.21,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வுலகை அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் அழைத்துச் செல்லும் ஒரு சிறந்த தலைவர் என்ற காரணத்தால், அவரை அல்-அசார் பல்கலைக் கழகத்தில் உரையாற்ற அழைத்துள்ளோம் என்று எகிப்து நாட்டின் இஸ்லாமியத் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

ஏப்ரல் 28, 29 ஆகிய இரு நாள்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எகிப்து நாட்டில் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்தின்போது, அல்-அசார் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பன்னாட்டுக் கருத்தரங்கில் உரையாற்ற அழைப்பு பெற்றத்தைக் குறித்து, இப்பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரி Abdel Rahman Moussa அவர்கள், கூறிய கருத்தை, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 28ம் தேதி நிகழும் இந்த பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்து கொள்ள, உலகின் பல நாடுகளிலிருந்தும் 200க்கும் அதிகமான மதத் தலைவர்களும், அறிஞர்களும் அழைக்கப்பட்டுள்ளனர் என்று Rahman Moussa அவர்கள் கூறியுள்ளார்.

'அமைதியின் விதைகள்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்தக் கட்டுரையில், குரல் எழுப்ப சக்தியற்ற பலரின் குரலாய் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செயலாற்றுகிறார் என்றும், 'இரத்தத்தால் உருவான கிறிஸ்தவ ஒன்றிப்பு' என்று அவர் கூறிய வார்த்தைகள், பல்வேறு கிறிஸ்தவ சபைகளை இணைக்க உதவியுள்ளன என்றும் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் திருத்தந்தை, 2ம் Tawadros அவர்கள் கூறிய கருத்தும் வெளியாகியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.