ஏப்.20,2017. பாகிஸ்தான் லாகூரில் உயிர்ப்புப் பெருவிழா வழிபாட்டில் நிகழவிருந்த தற்கொலைப்படை தாக்குதலை, காவல் துறையினர் தடுத்துவிட்டதைக் குறித்து, லாகூர் பேராயர், செபாஸ்டின் ஷா அவர்கள், காவல் துறையினருக்கு தலத்திருஅவையின் சார்பில் நன்றியும், வாழ்த்துக்களும் தெரிவித்தார்.
வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட உடையணிந்த ஒருவரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாலும், உடன் உழைத்த மற்றொரு பெண்ணை கைது செய்ததாலும், ஒரு தற்கொலைப்படை தாக்குதலை நிறுத்தினர் என்று UCAN செய்திக் குறிப்பு கூறுகிறது.
காவல் துறையினரின் பணிகளை பாராட்டி, பேராயர் ஷா அவர்கள், லாகூர் திரு இருதய பேராலயத்தில், காவல் துறை உயர் அதிகாரி அலி ராசா (Ali Raza) அவர்களுக்கு மலர் கொத்து அளித்து நன்றி கூறினார்.
2016ம் ஆண்டு உயிர்ப்புப் பெருவிழாவன்று லாகூர் பூங்காவில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலால் 72 பேர் கொல்லப்பட்டதையடுத்து, இவ்வாண்டு உயிர்ப்புப் பெருவிழாவிற்கு, அனைத்து கோவில்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்று UCAN செய்தி கூறியுள்ளது.
ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |