2017-04-20 16:10:00

மரியன்னை சகோதரர்கள் துறவு சபைக்கு திருத்தந்தையின் செய்தி


ஏப்.20,2017. Marist Brothers என்றழைக்கப்படும் மரியன்னை சகோதரர்கள் துறவு சபை, தன் 200ம் ஆண்டை சிறப்பிக்கும் தருணத்தில், அச்சபையின் 22வது பேரவை, கொலம்பியா நாட்டில் நிகழ்வதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அச்சபையினருக்கு மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

Marist சகோதரர்கள் சபையின் உலகத் தலைவர், சகோதரர், Emili Turú Rofes அவர்களுக்கு இஸ்பானிய மொழியில் திருத்தந்தை அனுப்பியுள்ள இம்மடலை, வத்திக்கான் செய்தித் துறை இவ்வியாழனன்று வெளியிட்டது.

இறைவன் செய்துள்ள நன்மைகளையும், சபையின் பாரம்பரியம் வழங்கியுள்ள நன்மைகளையும் நன்றியோடு நினைத்துப் பார்ப்பது-, நம்மை நன்றி நிறைந்தவர்களாக, பணிவுள்ளவர்களாக மாற்றுகிறது என்று, திருத்தந்தை தன் மடலின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்து வந்த 200 ஆண்டுகளைத் திருப்பிப் பார்ப்பது மட்டும் போதாது, இன்றைய தருணத்தில் நமக்கு விடுக்கப்படும் அழைப்பை உணர, தேர்ந்து தெளியும் மனநிலையையும் நாம் பெறவேண்டும் என்று திருத்தந்தை தன் மடலில் கூறியுள்ளார்.

கல்விப்பணி, மற்றும் இளையோரை உருவாக்கும் பணியைக் குறித்து, புனித Marcellin Champagnat, தான் வாழ்ந்த காலத்தில், தேர்ந்து தெளிந்ததோடு, ஒருவர் மீது காட்டும் அன்பின் வழியாக, அவரிடம் உள்ள மிகச் சிறந்த குணங்களை வெளிக்கொணர முடியும் என்பதையும் இப்புனிதரின் வழியே நாம் கற்றுக்கொள்ள முடியும் என்று திருத்தந்தை இம்மடலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்வி என்பது வெறும் அறிவு சார்ந்த பணியல்ல, மாறாக, அது உள்ளத்தையும் உருவாக்கும் பணி என்பதை Marist சகோதரர்கள் சபையின் நிறுவனர் நன்கு உணர்ந்திருந்தார் என்று திருத்தந்தை இம்மடலில் கூறியுள்ளார்.

உறுதியான, உண்மையான கொள்கைகளின் அடிப்படையில் சிறந்ததோர் உலகை உருவாக்குவது கல்வியாளர்களின் முக்கிய பணி என்று கூறியத் திருத்தந்தை, Marist சகோதரர்கள் சபையைச் சார்ந்த அனைவரும் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்கவேண்டும் என்று இம்மடலின் இறுதியில் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.