2017-04-18 14:35:00

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் : இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்


ஏப்.18,2017. நல்லவராம் இறைவன், கடந்த தொண்ணூறு ஆண்டுகளில், எனக்கு ஆற்றியுள்ள நன்மைகளை நினைக்கும்போது, எனது நெஞ்சம் நன்றியால் நிறைந்துள்ளது என்று, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், பிறந்த நாள் விழாவில் கூறினார்.

வத்திக்கானில், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தங்கியிருக்கும் Mater Ecclesiae இல்லத்தில், ஏப்ரல் 17, இத்திங்களன்று, ஜெர்மனியின் பவேரிய மாநில கலாச்சார முறைப்படி, எளிய முறையில், அவரின் 90வது பிறந்த நாள் சிறப்பிக்கப்பட்டது. இவ்விழாவில், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் சகோதரர் பேரருள்திரு ஜார்ஜ் இராட்சிங்கர், பவேரிய மாநில முதலமைச்சர் உட்பட, ஏறக்குறைய ஐம்பது பேர் கலந்துகொண்டனர்.

ஏப்ரல் 16, உயிர்ப்பு ஞாயிறன்று, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் 90வது பிறந்த நாள் இடம்பெற்றதால், அவ்விழா, இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்டது.

ஜெர்மனியின் தென் பகுதியிலுள்ள பவேரியா மாநிலத்தில், 1927ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி பிறந்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இவர், 2013ம் ஆண்டில் பாப்பிறை தலைமைப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். திருஅவையின் 600 வருட வரலாற்றில், பாப்பிறை தலைமைப் பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த முதல் திருத்தந்தை, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஆவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.