2017-04-10 15:58:00

வறியோரின் துணிகளைத் துவைக்கும் கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு


ஏப்.,10,2017. வறியோரின் துணிகளை இலவசமாகத் துவைத்து, உலர வைத்து, தேய்த்துக் கொடுக்கும் நிலையம் ஒன்றை திருத்தந்தையின் பெயரால் துவங்கியுள்ளது, உரோம் நகரின் சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பு.

உரோம் நகரில் இத்திங்களன்று துவக்கப்பட்டுள்ள 'திருத்தந்தை பிரான்சிஸ் சலவை நிலையம்' என்ற திட்டத்தின் வழியாக, வறுமையில் வாடுவோருக்கு, இவ்வழியில் உதவ முன்வந்துள்ளது, சான் எஜிதியோ அமைப்பு.

தங்க இடமின்றி தெருக்களில் வாழும் மக்களுக்கு, இரக்கத்தின் யூபிலி ஆண்டு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, இந்த உதவியை துவக்கியுள்ளதாகக் கூறும் சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பு, ஏற்கனவே, கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக, வறியோருக்கு கல்வி, உணவு என பல்வேறு உதவிகளை ஆற்றிவருகிறது.

சில அனைத்துலக நிறுவனங்கள் வழங்கிய பொருளுதவிகளைக் கொண்டு, ஆறு சலவை இயந்திரங்களையும், துணியை உலர வைக்கும் ஆறு இயந்திரங்களையும், துணி தேய்க்கும் இயந்திரங்களையும்  நிறுவி, பணிகளை இத்திங்கள் முதல் துவக்கியுள்ளது, சான் எஜிதியோ அமைப்பு.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.