ஏப்.08,2017. முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் 90வது பிறந்த நாளையொட்டி, ஜோசப் ராட்சிங்கர்-16ம் பெனடிக்ட் நிறுவனம், உரோம் நகரில் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது.
இந்நிறுவனத்தின் தலைவராகிய இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள், அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 1927ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி பிறந்தார். பிறந்த நாளன்றே திருமுழுக்கும் பெற்றார். அந்த நாள் அவ்வாண்டில் புனித சனிக்கிழமையாக இருந்தது. திருஅவையின் மிக முக்கிய திருவழிபாட்டுக் காலத்தில் தான் பிறந்ததற்கு நன்றியோடு இருப்பதாக, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் "Milestones" என்ற தனது நூலில் எழுதியுள்ளார். எனது வாழ்வு பாஸ்கா பேருண்மையில் மூழ்கியுள்ளது, இதைவிட பெரிய ஆசீர்வாதம் வேறு எதுவும் எனக்கு இருக்க முடியாது எனவும் அந்நூலில் எழுதியுள்ளார், திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இவ்வாண்டு இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு ஞாயிறன்று இத்திருத்தந்தையின் 90வது பிறந்த நாள் வருகின்றது என்றும், ஏனைய பிறந்த நாள்களைப் போலவே இப்பிறந்த நாளும் மிக எளிமையாகச் சிறப்பிக்கப்படும் என்றும், இவர், பெரிய விழாக்களை விரும்புவதில்லை என்றும், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் செயலராகப் பணியாற்றிய, பேராயர் Georg Ganswein அவர்கள் கூறினார்.
"ராட்சிங்கர் விருது" பெற்ற 13 இறையியலாளர்களால் எழுதப்பட்ட "Festschrift" என்ற நூல், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் 90வது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்படும். திருத்தந்தையின் விருதுவாக்கான, உண்மையின் இணைப் பணியாளர்கள் என்பது இந்நூலின் பொருளாகும்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |