2017-04-05 16:31:00

சிரியா போர், திருப்பீடத்திற்கு மிகுந்த கவலை அளிக்கிறது


ஏப்.,05,2017. ஏழாவது ஆண்டாக சிரியா நாட்டில் நடைபெற்றுவரும் போர், திருப்பீடத்திற்கு மிகுந்த கவலை அளிக்கிறது என்று, திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் துறை செயலர், பேராயர் பால் காலகர் அவர்கள், ஒரு பன்னாட்டு கருத்தரங்கில், ஏப்ரல் 5, இப்புதனன்று கூறினார்.

"சிரியாவின் எதிர்காலத்தைப் பேணுதல்" என்ற தலைப்பில், Brussels நகரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் காலகர் அவர்கள், மனிதாபிமான அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ள அகில உலக சட்டங்களை மதிப்பதற்கு, சிரியா அரசும், அதற்குத் துணைபோகும் அரசுகளும் தங்களையே அர்ப்பணிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

முடிவே இல்லாமல் தொடரும் இக்கொடுமைகளை நீக்கவும், அரசியல் வழி தீர்வுகளைத் தேடவும், அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டும் என்று பேராயர் காலகர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.    

சிரியாவிலிருந்து புலம்பெயர்ந்துள்ள 46 இலட்சம் மக்களுக்கு உதவிகள் செய்யும் வகையில், 2016ம் ஆண்டு, திருப்பீடமும், கத்தோலிக்கத் திருஅவையும், தங்கள் பல்வேறு அமைப்புக்கள் வழியே, 20 கோடி டாலர்கள் நிதி உதவியை வழங்கியுள்ளன என்று தன் உரையில் சுட்டிக்காட்டிய பேராயர் காலகர் அவர்கள், இந்த உதவிகள், மத வேறுபாடின்றி அனைவரையும் சென்றடைந்துள்ளது என்பதையும் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.