2017-03-31 16:22:00

தவறுகளைச் சுட்டிக்காட்டத் தயங்காத நண்பர் -ஹாங்காங் கர்தினால்


மார்ச்,31,2017. ஹாங்காங் பகுதியில் மதச் சுதந்திரமும், பன்முகத் தன்மையும் தொடந்து செழிக்கும் என்றும், குடும்பம், திருமணம் போன்ற உயர் விழுமியங்கள் மதிக்கப்படும் என்றும், தான் எதிர்பார்ப்பதாக, ஹாங்காங் கர்தினால், ஜான் டாங் அவர்கள் அரசு அதிகாரி ஒருவருக்கு அனுப்பியுள்ள மடலில் குறிப்பிட்டுள்ளார்.

ஹாங்காங் பகுதியின் அரசியல் பிரதிநிதியாக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Carrie Lam Cheng Yuet-ngor அவர்களுக்கு, கர்தினால் டாங் அவர்கள் அனுப்பியுள்ள வாழ்த்து மடலில், "தவறுகளைச் சுட்டிக்காட்டத் தயங்காத ஒரு நண்பர்" என்று தன்னைப் பற்றி கூறியுள்ளார்.

கத்தோலிக்கராகப் பிறந்து, ஹாங்காங்கில் Canossian அருள்சகோதரிகள் நடத்திவரும் ஒரு பள்ளியில் கல்வி பயின்ற Carrie Lam அவர்கள், தற்போதைய சீன அரசுக்கு பெரும் ஆதரவாக செயலாற்றுபவர் என்று, ஆசிய செய்தி கூறியுள்ளது.

நடைபெற்ற தேர்தல், குடியரசு முறையில் முற்றிலும் நடத்தப்படவில்லை என்பதை, தன் மடலில் சுட்டிக்காட்டும் கர்தினால் டாங் அவர்கள், ஹாங்காங் தேர்தல்கள் குடியரசு முறையில் நிகழ்வதற்கு, Carrie Lam அவர்கள், தன் பதவிக்காலத்தில், முயற்சிகள் எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஹாங்காங் பகுதியில் இயங்கிவரும் கத்தோலிக்க பள்ளிகள் சுதந்திரமாக பணியாற்றுதல், குடும்பம், திருமணம் குறித்த திருஅவையின் கருத்துக்களுக்கு மதிப்பளித்தல், கருத்துச் சுதந்திரம், மற்றும், மதச் சுதந்திரம் ஆகிய உரிமைகளைப் பெற்றுத் தருவதற்கு, Carrie Lam அவர்கள், முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று, கர்தினால் டாங் அவர்கள் தன் மடலில் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.