2017-03-31 16:09:00

எல் சால்வதோர் நாட்டில், சுரங்கப் பணிகளுக்கு அரசு தடை


மார்ச்,31,2017. மார்ச் 29, இப்புதனன்று, எல் சால்வதோர் நாட்டில், உலோகக் கனிமங்களை வெட்டியெடுக்கும் அனைத்து சுரங்கப் பணிகளும் நிறுத்தப்பட வேண்டும் என்று அந்நாட்டு அரசு ஆணை பிறப்பித்துள்ளதற்கு, தலத்திருஅவை பெரிதும் ஆதரவு தெரிவித்துள்ளது.

மிகப் பழமையான முறைகளில் சுரங்கத் தொழில் மேற்கொள்ளப்படுவது, மனித உயிர்களுக்கும், அவர்களது நலத்திற்கும் பாதகமான விளைவுகளை உருவாக்குகின்றன என்று, சான் சால்வதோர் பேராயர் José Luis Escobar Alas அவர்கள் கடந்த சில ஆண்டுகளாகக் கூறி வந்துள்ளார்.

சுரங்கத் தொழிலுக்கு எதிராக, 30,000த்திற்கும் அதிகமான மக்களின் கையெழுத்துக்களைப் பெற்று, மார்ச் 9ம் தேதி, பேராயர் Escobar Alas அவர்கள், அரசிடம் மனு ஒன்றை சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எல் சால்வதோர் நிலத்தின் வளங்களை பாதுகாத்தல் என்ற நோக்கங்களை மனதில் கொண்டு, அந்நாட்டின் பாராளுமன்றத்தின் 84 பிரதிநிதிகளில், 69 பிரதிநிதிகள், இந்தத் தடைச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று, பீதேஸ் (Fides) செய்தி கூறியுள்ளது.

பூமியின் மேல்மட்டத்திலும், சுரங்கங்களிலும் நடைபெறும் பணிகள் நிறுத்தப்படவேண்டும் என்றும், சயனைட், பாதரசம் போன்ற வேதிப்பொருள்களின் பயன்பாடு நிறுத்தப்பட வேண்டும் என்று அரசு தன் தடையுத்தரவில் கூறியுள்ளது.

தங்கம் வெட்டியெடுக்கும் OceanaGold என்ற ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு எதிராக, எல் சால்வதோர் நாடு தொடுத்த வழக்கில் 2016ம் ஆண்டு வெற்றிபெற்றதையடுத்து, இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்று பீதேஸ் செய்தி கூறியுள்ளது. 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.