2017-03-27 16:27:00

மலர்ந்தது முதல் மடியும் வரை மனித வாழ்வின் மதிப்பு


மார்ச்,27,2017. 'கருவில் உருவானது முதல் மரணம் வரை, மனித வாழ்வெனும் புனிதக் கொடையை அக்கறையுடன் எடுத்துச் செல்வதே, அனைத்து வகையான வன்முறைகளையும் தடுப்பதற்கான சிறந்த வழி' என தன் டுவிட்டர் பக்கத்தில் இத்திங்களன்று எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

எச்சூழலிலும் மனித வாழ்வு மதிக்கப்பட்டு, போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை திருஅவை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இத்திங்களன்று காலை, திருப்பீடத்தில், மேற்கு கானடாவிலிருந்து 'அத் லிமினா' சந்திப்பையொட்டி வந்திருந்த ஆயர்களை சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

5 ஆண்டிற்கு ஒருமுறை திருத்தந்தையையும், புனித பேதுரு கல்லறையையும் சந்திக்க, ஆயர்கள் உரோம் நகர் வருவதே 'அத் லிமினா' சந்திப்பு என அழைக்கப்படுகிறது.

இத்திங்களன்று, மேற்கு கானடா பகுதியிலிருந்து, 22 ஆயர்கள், ஓர் அப்போஸ்தலிக்க நிர்வாகி, ஆயர் பேரவைப் பொதுச்செயலர் ஆகியோரை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.