2017-03-18 13:59:00

தவக்காலச் சிந்தனை - தண்ணீர், ஒளி, வாழ்வு


உயிர்ப்புத் திருவிழாவை நோக்கி, நாம் தவக்காலப் பயணத்தை மேற்கொண்டுள்ளோம். இந்த உயிர்ப்புப் பெருவிழாவுடன் தொடர்புடைய மூன்று அடையாளங்கள் - தண்ணீர், ஒளி, வாழ்வு. இந்த ஞாயிறன்றும், இதைத் தொடரும் இரு ஞாயிறுகளிலும், இம்மூன்று அடையாளங்களை வலியுறுத்தும் நற்செய்தி வாசகங்கள் நமக்குத் தரப்பட்டுள்ளன. இயேசு, சமாரியப் பெண்ணைச் சந்திப்பதும், தண்ணீர் குறித்து பேசுவதும், இந்த வாரம் தரப்பட்டுள்ள நிகழ்ச்சி (யோவான் 4: 5-42). பார்வை இழந்த ஒருவருக்கு, இயேசு, பார்வை வழங்குவதும், ஒளியைக் குறித்துப் பேசுவதும், அடுத்த வாரம் நாம் வாசிக்கும் நற்செய்தி (யோவான் 9: 1-41). இறந்த இலாசரை உயிர்ப்பித்து, வாழ்வைப் பற்றி இயேசு பேசுவது, மூன்றாம் வாரம் தரப்பட்டுள்ள நற்செய்தி (யோவான் 11: 1-45).

மேலும், தவக்காலத்தின் உயிர் நாடியான மாற்றம் என்ற கருத்து, இந்த மூன்று நிகழ்வுகளிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சமாரியப் பெண்ணின் நெறி பிறழ்ந்த வாழ்விலும், அவர் கொண்டிருந்த இறை நம்பிக்கையிலும் மாற்றம் நிகழ்கின்றது. பார்வை இழந்தவர், தன்னை குணமாக்கியவர் யார் என்பதை அறியாமலேயே அவர் மீது நம்பிக்கை கொண்டு, அவரை, பரிசேயர்களுக்கு முன் உயர்த்திப் பேசுகிறார். பின்னர், இயேசுவைச் சந்தித்ததும், முழு நம்பிக்கையுடன் அவரிடம் சரணடைகிறார். மூன்றாவது நிகழ்வில், உயிரிழந்து, புதைக்கப்பட்ட இலாசர், மீண்டும் உயிர் பெற்றெழும் உன்னத மாற்றம் நிகழ்கிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.