2017-03-16 15:22:00

வறியோர் மீது அக்கறையற்று வாழ்வது, பாவம் - திருத்தந்தை


மார்ச்,16,2017. தான் என்ற சூழலுக்குள் தன்னையே மூடிக்கொண்டு, தன்னுடைய செல்வங்களில் நிறைவுகண்டு, தன்னை மட்டுமே நம்பி வாழ்பவர், திசைகாட்டும் கருவியை இழந்து, தவிக்க வேண்டியிருக்கும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் வழங்கிய மறையுரையில் எச்சரிக்கை விடுத்தார்.

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றியத் திருப்பலியில், லூக்கா நற்செய்தியில் கூறப்பட்டுள்ள செல்வரும், இலாசரும் உவமையினை அடித்தளமாகக் கொண்டு, மறையுரை வழங்கிய திருத்தந்தை, வறியோர் மீது அக்கறையற்று வாழ்வது, அழிவுக்கு இட்டுச் செல்லும் பாவம் என்று குறிப்பிட்டார்.

பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது, ஆபிரகாம் மடியில் இருந்தவர் லாசர் என்று அடையாளம் காண முடிந்த செல்வர், இவ்வுலக வாழ்வில் அவரது பெயரைக் கூட தெரிந்துகொள்ள விரும்பாத சுயநலத்தில் சிக்கியிருந்தார் என்று, திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

தெருக்களில் வறியோரையும், வீடற்றோரையும் காணும் நாம், 'இவர்கள் திருடுபவர்கள், ஏமாற்றுபவர்கள்' என்று நமக்குள் நாமே சொல்லிக்கொண்டு, நம் வழியே நடக்கிறோமா என்ற கேள்வியை தன் மறையுரையில் எழுப்பினார், திருத்தந்தை.

மருத்துவமனையில் குண்டு விழுந்து குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்ற செய்தியைப் போல பல துயரமானச் செய்திகளைக் கேட்கும்போது, பாவப்பட்ட அம்மக்களுக்காக ஒரு செபம் சொல்லிவிட்டு நம் வழியே நாம் தொடர்வது, நம்மையும் பாவ வழியில் நடத்திச் செல்லும் மனநிலையாக மாறிவிடும் என்று, திருத்தந்தை தன் மறையுரையில் எச்சரிக்கை விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.