2017-03-09 15:37:00

திருத்தந்தையின் மிலான் நகர் மேய்ப்புப்பணி பயண விவரங்கள்


மார்ச்,09,2017. கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு திருநாளான, மார்ச் 25ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மிலான் நகருக்கு மேற்கொள்ளும் மேய்ப்புப்பணி பயணத்தின் விவரங்களை, வத்திக்கான் தொடர்புத் துறை, இப்புதனன்று வெளியிட்டது. 

மார்ச் 25ம் தேதி, இத்தாலிய நேரம், காலை 7.10 மணிக்கு உரோம் நகரிலிருந்து விமானத்தில் புறப்படும் திருத்தந்தை, 8 மணியளவில் மிலான் நகரைச் சென்றடைவார்.

மிலான் நகரின், Forlanini பகுதியில், 'வெள்ளை இல்லங்களில்' தங்கியுள்ள நாடோடிகள், இஸ்லாமியர், மற்றும், ஏனைய புலம்பெயர்ந்தோர் குடும்பங்களைச் சந்திக்கும் நிகழ்வுடன், திருத்தந்தையின் பயணம் துவங்குகிறது.

இதைத் தொடர்ந்து, அர்ப்பண வாழ்வில் ஈடுபட்டுள்ள இருபால் துறவியர், மற்றும், அருள்பணியாளர்களைச் சந்திக்கும் திருத்தந்தை, San Vittore சிறைச் சாலையில் உள்ள கைதிகளோடு தன் மதிய உணவை அருந்துவார்.

பிற்பகல் மூன்று மணியளவில், Monza பூங்கா என்ற இடத்தில் திருப்பலியாற்றும் திருத்தந்தை, மாலை 5.30 மணிக்கு, Meazza-San Siro என்ற விளையாட்டுத் திடலில், இளையோரை, குறிப்பாக, அண்மையில் உறுதிப்பூசுதல் பெற்ற இளையோரைச் சந்தித்து, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறார்.

மாலை 6.30 மணிக்கு, மிலான் விமான தளத்திலிருந்து புறப்படும் திருத்தந்தை, 7.30 மணியளவில் உரோம் நகரின் விமான நிலையத்தை சென்றடைவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.