மார்ச்,06,2017. இந்தோனேசியாவில் கடந்த ஆண்டு மத சிறுபான்மையினருக்கும், மத விடுதலைக்கும் எதிரான உரிமை மீறல்கள் அதிகரித்திருந்ததாக, அந்நாட்டின் இஸ்லாமிய நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் இஸ்லாமிய ஆய்வாளர்களால் நடத்தப்படும் Wahid நிறுவனம், அந்நாட்டின் கடந்த ஆண்டு மத உரிமை மீறல்கள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 2016ம் ஆண்டின் உரிமை மீறல் நடவடிக்கைகள், அதற்கு முந்தைய ஆண்டைவிட 7 விழுக்காடு அதிகம் என தெரிவிக்கிறது.
இவ்வறிக்கை குறித்து கருத்து தெரிவித்த சில கத்தோலிக்கத் தல அதிகாரிகள், பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒரே குடும்பமாக வாழும் நிலையில், சில இஸ்லாமிய, மற்றும், அரசியல் தலைவர்களின் தவறான வழிகாட்டுதலாலேயே, மத உரிமை மீறல்கள் இடம்பெறுவதாகத் தெரிவித்தனர்.
இவ்வாண்டில், இதுவரை கிடைத்துள்ள புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டில் இதே காலத்தில் இடம்பெற்ற மத உரிமை மீறல்களைவிட இவ்வாண்டில் மேலும் 7 விழுக்காடு அதிகரித்துள்ளதாக, இஸ்லாமிய Wahid நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியா, இஸ்லாமியர்களை பெரும்பான்மையாகக்கொண்ட நாடாகும்.
ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |