2017-03-04 16:11:00

இளையோர், மாற்றத்தை கொணர்பவர்கள் வருங்காலப் பாதுகாவலர்கள்


மார்ச்,04,2017. அழியும் ஆபத்தை எதிர்நோக்கி வரும், வன உயிரினங்களைக் காப்பாற்றும் பொறுப்பு, இளையோரிடம் உள்ளது என்று, ஐ.நா.பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

“இளையோரின் குரல்களைக் கேளுங்கள்” என்ற தலைப்பில், மார்ச் 03, இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக வன உயிரின நாளுக்கென வெளியிட்ட செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார், கூட்டேரஸ்.

மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள் மற்றும், வருங்காலப் பாதுகாவலர்கள் என்ற வகையில், இளையோர், வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ள கூட்டேரஸ் அவர்கள், திருட்டுத்தனமாக வேட்டையாடுதல், சட்டத்திற்குப் புறம்பே வர்த்தகம் செய்தல் ஆகியவை, வனவிலங்குகளின் அழிவுக்கு ஆபத்தாக அமைந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.

உலகின் 2 விழுக்காட்டு நிலப்பரப்பே இந்தியாவில் உள்ள போதிலும், 8 விழுக்காட்டு வன உயிரினங்கள் இங்கு காணப்படுவதால், உலகிலுள்ள 12 மிகப் பெரிய பல்லுயிர் பெருக்கம் இடம்பெறும் நாடுகளில், இந்தியாவும் ஒன்றாக விளங்குகிறது. உலகளவில் கண்டறிப்பட்டுள்ள 1.75 மில்லியன் சிறிய உயிரினங்களில், இந்தியாவில் மட்டும் 1,26,188 சிறிய உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

உலக வன உயிரின நாள், மார்ச் 03ம் தேதி கடைப்பிடிக்கப்பட்ட வேண்டுமென, 2013ம் ஆண்டு, டிசம்பர் 20ம் தேதி, ஐ.நா. பொது அவை தீர்மானித்தது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.