மார்ச்,03,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச், ஏப்ரல் மாதங்களில் தலைமையேற்று நடத்தும் திருவழிபாடுகள் பற்றிய விவரங்களை, திருத்தந்தையின் திருவழிபாடுகளுக்குப் பொறுப்பாளரான, பேரருள்திரு குய்தோ மரினி (Guido Marini) அவர்கள் இவ்வெள்ளியன்று வெளியிட்டார்.
மார்ச் 17, வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் பாவ மன்னிப்பு திருவழிபாட்டை தலைமையேற்று நடத்தும் திருத்தந்தை, கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு விழாவான, மார்ச் 25, சனிக்கிழமையன்று, மிலானுக்கு மேய்ப்புப்பயணம் மேற்கொள்வார்.
ஏப்ரல் 2, ஞாயிறன்று, கார்பி மறைமாவட்டத்திற்கு மேய்ப்புப்பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை, ஏப்ரல் 9ம் தேதி குருத்தோலை ஞாயிறன்று, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றுவார்.
ஏப்ரல் 13, புனித வியாழன் காலை 9.30 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலி, ஏப்ரல் 14, புனித வெள்ளியன்று மாலை 5 மணிக்கு, திருப்பாடுகளின் திருவழிபாடு, இரவு 9.15 மணிக்கு, கொலோசேயம் திடலில் சிலுவைப்பாதை, ஏப்ரல் 15 புனித சனி, இரவு 8.30 மணிக்கு, தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், ஆண்டவரின் பாஸ்கா திருவிழிப்பு திருவழிபாடு ஆகியவற்றை நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 16, ஞாயிறு, காலை 10 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா திருப்பலியை நிறைவேற்றும் திருத்தந்தை, அன்று நண்பகலில், உரோம் நகருக்கும், உலகுக்குமென “ஊர்பி எத் ஓர்பி (Urbi et Orbi)” செய்தியையும் ஆசீரையும் வழங்குவார்.
புனித வியாழனன்று மாலையில், ஆண்டவரின் இறுதி இரவு உணவு திருப்பலியை, திருத்தந்தை நிறைவேற்றும் இடம், பின்னர் அறிவிக்கப்படும் எனவும், பேரருள்திரு குய்தோ மரினி அவர்கள் கூறியுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |