2017-03-03 16:02:00

ஐரோப்பியர்கள் கிறிஸ்தவ பாரம்பரியத்திற்கு திரும்ப அழைப்பு


மார்ச்,03,2017. ஐரோப்பாவின் எதிர்காலம் குறித்து பரவலாக கவலைகள் அதிகரித்துள்ள இக்காலத்தில், ஐரோப்பியர்கள், தங்களின் கிறிஸ்தவ பாரம்பரியத்தை நினைவில்கொள்ளுமாறு, அக்கண்டத்தின் கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவத் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஐரோப்பிய கத்தோலிக்க - ஆர்த்தடாக்ஸ் அமைப்பு, பாரிசில் நடத்திய 5வது கூட்டத்தின் இறுதியில் வெளியிட்ட அறிக்கையில், ஐரோப்பிய சமுதாயங்கள் தங்களின் ஆன்மீக வளங்களுக்குத் திரும்பி, தற்போது ஐரோப்பா எதிர்கொள்ளும் சூழலுக்குப் பதில்கூருமாறு  கேட்டுக்கொண்டுள்ளது.

ஐரோப்பிய அரசுகள், மனிதரின் அடிப்படை உரிமைகளுக்கு உறுதியளிக்கும்வேளை, பொது வாழ்விலிருந்து மதத்தை ஓரங்கட்ட அல்லது முழுவதும் புறக்கணிக்க, பல சக்திகள் முயற்சித்து வருகின்றன எனவும், அவ்வறிக்கை குறை கூறுகின்றது.  

ஐரோப்பிய கத்தோலிக்க ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பிலிருந்து 12 பிரதிநிதிகள், ஐரோப்பிய ஆர்த்தடாக்ஸ் சபைகளின் கூட்டமைப்பிலிருந்து 12 பிரதிநிதிகள் என, மொத்தம் 24 பேர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, ஐரோப்பா தற்போது எதிர்கொள்ளும் பயங்கரவாத அச்சுறுத்தல், சமய சுதந்திரம், மனிதரின் மாண்பு போன்றவை குறித்து கலந்துரையாடினர். 

 ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.