2017-02-22 16:24:00

குடிபெயர்ந்தோருக்கு புகலிடம் தரவேண்டிய கத்தோலிக்க பங்குகள்


பிப்.22,2017. அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து வெளியேற்றப்படும் ஆபத்திற்கு உள்ளாகியிருக்கும் குடிபெயர்ந்தோருக்கு புகலிடம் தரும் சரணாலயங்களாக கத்தோலிக்க பங்குகளும், ஏனைய குழுமங்களும் செயல்படவேண்டும் என்று, கலிபோர்னியாவில் நடைபெற்ற ஒரு தேசிய கூட்டத்தில் விண்ணப்பம் எழுப்பப்பட்டது.

தேசிய சமூகநல இயக்கங்களின் நான்கு நாள் மாநாடு, கலிபோர்னியாவின் மொதெஸ்தோ எனுமிடத்தில், இஞ்ஞாயிறன்று நிறைவுற்ற வேளையில், வெளியிடப்பட்ட தீர்மான அறிக்கையில், படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதரும், இறைவனின் கொடை என்பதால், ஒவ்வொருவரும் புனிதமாகக் கருதப்படவேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

தனி மனித மாண்பு மற்றும் படைப்பு அனைத்தின் மீதும் காட்டப்படவேண்டிய மரியாதை ஆகிய விழுமியங்களுக்கு எதிராக, அமெரிக்க ஐக்கிய நாட்டை ஆட்சி செய்யும் முதலாளித்துவம் செயல்படுகிறது என்பதை, திருத்தந்தையின் செய்திகள் வலியுறுத்துகின்றன என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குடிபெயர்ந்தோருக்கு ஆபத்து விளைவிக்கும் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், இந்த ஆபத்திலிருந்து அப்பாவி மக்களைக் காக்கும் கடமை, கத்தோலிக்க சமுதாயத்திற்கு அதிகம் உள்ளது என்று இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மேலும், குடிபெயர்ந்தோர் பிரச்சனை குறித்து, கத்தோலிக்க ஆயர்கள், மக்களுக்கு, தெளிவான கருத்துக்களையும், செயல்முறை திட்டங்களையும், ஒரு சுற்றுமடல் வழியே வழங்கவேண்டும் என்று, தேசிய சமூகநல இயக்கங்களின் மாநாட்டு அறிக்கை விண்ணப்பிக்கிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.