2017-02-18 14:31:00

பொதுக்காலம் 7ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


நெடுவழிப்பாதையின் ஓரமாய் இருந்த உணவகத்துக்கு முன்பாக ஒருவர் தன் லாரியை நிறுத்திவிட்டு, உள்ளே சாப்பிடச் சென்றார். அவர் கேட்ட உணவு, பரிமாறப்பட்டது. அப்போது, ‘மோட்டார் சைக்கிள்’களில் வந்த ஆறு பேர், அவரது உணவுத் தட்டைப் பறித்து, அட்டகாசமான வெற்றிச் சிரிப்புடன், தங்களுக்குள் பகிர்ந்துகொண்டனர். எதுவும் பேசாத அந்த லாரி ஓட்டுனர், தன் உணவுக்குரியத் தொகையைக் கொடுத்துவிட்டு வெளியேறினார். மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், "அவனுக்குப் பேசத்தெரியாதுன்னு நினைக்கிறேன். ஒரு வார்த்தையும் சொல்லாமப் போயிட்டான்" என்று சொல்லி உரக்கச் சிரித்தார். அந்தக் கும்பலைச் சார்ந்த மற்றொருவர், "அவனுக்குச் சண்டைபோடவும் தெரியாதுன்னு நினைக்கிறேன். பயந்து ஓடிட்டான்" என்று கூறி, அவரும் பலமாகச் சிரித்தார். அப்போது உணவகத்தில் பரிமாறிக் கொண்டிருந்த ஒருவர் அவர்களிடம் வந்து, "அவருக்கு லாரி ஒட்டவும் தெரியாதுன்னு நினைக்கிறேன். நீங்க நிறுத்தி வச்சிருந்த மோட்டார் சைக்கிள் எல்லாத்தையும், லாரி ஏத்தி, நொறுக்கிட்டுப் போயிட்டார்" என்று சொன்னார்.

இந்தக் கதையைக் கேட்கும்போது, நம் உதட்டோரம் சின்னதாய் ஒரு புன்னகை மலர்வதை உணர்கிறோம். இத்தகையக் காட்சிகள் நம் திரைப்படங்களில் அடிக்கடி வந்து நம் கைத்தட்டலைப் பெற்றுள்ளன. அந்த லாரி ஓட்டுனர், மோட்டார் சைக்கிள் ‘தாதா’க்களுக்கு நல்ல பாடம் சொல்லித்தந்தார் என்ற மகிழ்ச்சியே, கைத்தட்டலாக மாறுகிறது. 'பழிக்குப் பழி' என்ற கருத்தை, பலவழிகளில் சொல்லும் கதைகளை, காட்சிகளை நாம் இரசிக்கிறோம்.

'பழிக்குப் பழி', 'பதிலுக்குப் பதில்', 'பல்லுக்குப் பல்' 'கண்ணுக்குக் கண்' ... இவை எதுவுமே கிறிஸ்தவ வாழ்வுமுறை அல்ல என்பதை, இன்றைய நற்செய்தி வழியே இயேசு, ஆழமாய் சொல்லித்தருகிறார். இந்தக் கண்ணியமான, அதேநேரம், கடினமானப் பாடத்தைக் கற்றுக்கொள்ள, இறைவன், நம் ஒவ்வொருவருக்கும், திறந்த மனதைத் தரவேண்டும் என்ற வேண்டுதலுடன், நம் சிந்தனைகளைத் துவக்குவோம்.

'பழிக்குப் பழி' என்பது, இஸ்ரயேல் மக்களிடமும், அவர்களைச் சுற்றி வாழ்ந்த பல இனத்தவரிடமும் பழக்கத்தில் இருந்த வழிமுறை. எந்த அளவுக்கு, பழிக்குப் பழி வாங்கலாம் என்பதை, பாபிலோனிய அரசன், ஹம்முராபி உருவாக்கியச் சட்டங்கள், தெளிவாக விளக்கின. மோசே வழங்கிய சட்டங்கள், ஹம்முராபியின் சட்டங்களை ஓரளவு எதிரொலித்தன. பழிக்குப் பழி என்ற வெறி, கட்டுக்கடங்காமல் வளர்ந்திருந்த அன்றைய காலக்கட்டத்தில், ஒருவருக்கு மற்றொருவர் இழைத்த தீங்கிற்கு ஈடான தண்டனைகள் வழங்கப்படலாம் என்பதை, மோசேயின் சட்டம் நிலைநாட்டியது. அதுவே, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற மந்திரமாக இஸ்ரயேல் மக்கள் நடுவே நிலவி வந்தது. இந்த மந்திரத்தை மாற்றி எழுத முன்வந்தார் இயேசு. தீங்கு, இழப்பு, ஈடு என்ற எண்ணங்களை முன்னிறுத்தாமல், அன்பை, மன்னிப்பை முன்னிறுத்தும் புதிய சட்டங்களை, இயேசு, தன் மலைப்பொழிவில் வழங்கியுள்ளார்:

மத்தேயு நற்செய்தி 5: 38-48

அக்காலத்தில் இயேசு தன் சீடர்களிடம் கூறியதாவது: “‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’ என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக்கன்னத்தில் அறைபவருக்கு, மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.”

இயேசுவின் இந்தக் கூற்றில், அவர், 'வலக்கன்னம்' என்று குறிப்பிட்டுச் சொன்னது, நம் கவனத்தை ஈர்க்கிறது. "உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு, மறுகன்னத்தையும் காட்டுங்கள்" என்று இயேசு சொல்லவில்லை. உங்களை வலக்கன்னத்தில் அறைபவருக்கு, மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள் என்பதே, இயேசு வழங்கும் சவால்.

நம்மில் பலர், வலது கை பழக்கம் உள்ளவர்கள் என்பதை அறிவோம். இதை மனதில் வைத்து சிந்தித்தால், நமக்கு முன் இருக்கும் ஒருவரை, வலது கையால் அறைந்தால், அவரது இடது கன்னத்தில்தான் அறை விழும். ஆனால், நமக்கு முன்னிருப்பவரை புறங்கையால் அறையும்போது, அவரது வலது கன்னத்தில் அறை விழும். புறங்கையால் அறைவது என்பது, வெறும் உடல் வேதனையை மட்டுமல்ல, அத்தோடு, அவமானத்தையும் கலந்து வழங்கும் ஓர் அறை.

Paul Penley என்ற விவிலிய ஆய்வாளர், “Turning the Other Cheek”: Jesus’ Peaceful Plan to Challenge Injustice - அதாவது, "'மறுகன்னத்தை திருப்பிக் காட்டுதல்': அநீதிக்கு சவால் விடும் இயேசுவின் அமைதி நிறைந்த திட்டம்" என்ற தலைப்பில் எழுதியள்ள கட்டுரையில், இந்த வரிகளை சிறிது ஆழமாக ஆய்வு செய்துள்ளார்.

யூதேயாவை ஆக்கிரமித்திருந்த உரோமை அரசின் படைவீரர்கள், இஸ்ரயேல் மக்களை ஒவ்வொரு நாளும் சீண்டிப் பார்ப்பதில் மகிழ்ச்சியடைந்தனர். யூதர்கள் உடுத்தியிருந்த உடைகளையும், உடைமைகளையும், பறித்துச்செல்வது, ஏதாவது ஒரு பொருளை வீரர்கள் சுமக்கவேண்டியச் சூழலில், எதிரே ஒரு யூதர் வந்துவிட்டால், அவர் அந்த சுமையைச் சுமந்து, தன்னுடன் வருவதற்கு கட்டாயப்படுத்துவது என்று, பல அநீதிகள் அரங்கேறின. அந்நேரங்களில், யூதர்கள், உரோமை வீரர்களை எதிர்த்தால், அவர்களிடையே கைகலப்பும் உருவானது.

பொதுவாக, ஒரு கைகலப்பு நிகழும்போது, உரோமை வீரர்கள், தங்களுக்குச் சமமான மற்றொரு உரோமையரை அறைய வேண்டியிருந்தால், வலது வலது கரத்தின் உள்ளங்கையால் அறைவார், எனவே, தாக்கப்பட்ட உரோமையரின் இடது கன்னத்தில் அறை விழும். ஆனால், ஒரு யூதர், தனக்குச் சமமானவர் அல்ல என்பதை நிலைநாட்டும் வகையில், உரோமை வீரர், வலது கரத்தின் புறங்கையால் அவரைத் தாக்குவார், எனவே, அவரது வலக்கன்னத்தில் அறை விழும்.

இந்த அநீதிகள் அனைத்தையும் அனுபவித்திருந்த இயேசு, அநீதிகளை ஒழிப்பதற்கு வழிகளைச் சொல்லித்தருகிறார். உரோமையர்களுக்கு மட்டுமல்ல, தங்களை, தாழ்ந்தவர்கள் என்று கருதி, புறங்கையால் அறைபவர்கள் அனைவருக்கும், யூதர்கள் தங்கள் மறுகன்னத்தைக் காட்டுவதால், சொல்லித்தரக்கூடிய பாடத்தை, வார்த்தைகளில் வடித்தால், இவ்விதம் இருக்கும் என்று இயேசு சொல்லாமல் சொல்கிறார்: "என்னை இரண்டாம் தர மனிதராக எண்ணி, புறங்கையால் அறைந்துவிட்டீர். இதோ, என் மறு கன்னம். முடிந்தால், இங்கு அறையும். அப்படி அறைவதால், என்னை உமக்குச் சமம் என்று நீர் ஏற்கவேண்டியிருக்கும். உம்மால் முடியுமா?" என்று, சவால் விடுக்கும் ஒரு செயல் இது.

அதேபோல், தன் அங்கியைப் பறிப்பவருக்கு மேலாடையையும் சேர்த்து வழங்குவது; ஒரு கல் தொலை, சுமை சுமக்க வற்புறுத்துபவருடன், இரு கல் தொலை நடப்பது என்ற வழிகளைப் பின்பற்றினால், அநீதமாக நடந்துகொள்பவர்கள் நீதியை உணர்வதற்கு அது வழி வகுக்கும் என்பதை, "ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்ற சொற்கள் வழியே இயேசு ஒரு சவாலாக நம்முன் வைக்கிறார்.

மறுகன்னத்தைக் காட்டுவது, மேலாடையையும் சேர்த்துத் தருவது, கூடுதல் ஒரு மைல் நடப்பது ஆகிய நற்செயல்கள், நாம் புண்ணியத்தில் வளர்வதற்குச் சிறந்த வழிகள் என்ற கோணத்திலும் எண்ணிப்பார்க்கலாம். ஆனால், அது, இயேசுவின் கண்ணோட்டம் அல்ல. மறுகன்னத்தைக் காட்டுவதால், நமக்குள் நல்ல மாற்றங்கள் உருவாகும் நேரத்தில், நம்மைத் தாக்கும் பகைவரிடம் மாற்றம் எதுவும் நிகழவில்லையெனில், நாம் மறுகன்னத்தைக் காட்டுவதில் அர்த்தமில்லை. நாம் மறுகன்னத்தைக் காட்டுவதால், நமது பகைவரிடமும் மாறுதல்கள் வரவேண்டும். அந்த மாறுதல்கள், திரைப்படங்களில் வருவதுபோல், ஒரு நொடியில், ஒரு நாளில் வராது என்பதை, நாம் அனைவரும் அறிவோம். இருந்தாலும், அம்மாறுதல்கள் வரும்வரை, நாம் இந்த நற்செயல்களை, நம்பிக்கையோடு தொடரவேண்டும். இதுதான் இயேசு நமக்கு முன் வைக்கும் சவால்.

'மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்' என்று இயேசு கூறிய சொற்களை, மகாத்மா காந்தி, மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் போன்றோர், தங்கள் அறவழி, அகிம்சை வழிப் போராட்டங்களின் தாரக மந்திரமாக ஏற்றுக்கொண்டனர் என்பதை, வரலாறு சொல்கிறது.

'காந்தி' என்ற திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி இது: காந்தி அவர்களும், அவரது நண்பரும், கிறிஸ்தவப் போதகருமான சார்லி ஆண்ட்ரூஸ் அவர்களும் ஒரு நாள் வீதியில் நடந்து செல்லும்போது, ஒரு ரௌடி கும்பல் திடீரென அவர்களை வழிமறித்து நிற்கும். அவர்களைக் கண்டதும், "வாருங்கள், நாம் வேறுவழியில் சென்றுவிடுவோம்" என்று சார்லி, காந்தியிடம் சொல்வார். காந்தி அவரிடம், "உன் எதிரி உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால், அவருக்கு மறு கன்னத்தைக் காட்டவேண்டுமென்று இயேசு சொல்லவில்லையா?" என்று கேட்பார். அதற்கு சார்லி, "சொன்னார்... ஆனால், அதை ஓர் உருவகமாய்ச் சொன்னார்" என்று பூசி மழுப்புவார். காந்தி அவரிடம், "இயேசு அப்படிச் சொன்னதாக எனக்குத் தோன்றவில்லை. எதிராளிகள் முன்னிலையில் நாம் துணிவுடன் நிற்கவேண்டும். அவர்கள் எத்தனை முறை அடித்தாலும், திருப்பி அடிக்கவோ, திரும்பி ஓடவோ மறுத்து, துணிவுடன் நிற்கவேண்டும் என்பதையே இயேசு சொல்லித்தந்தார் என்று நினைக்கிறேன்" என்று சொல்வார். இக்காட்சியில், காந்தியடிகள் கூறும் வார்த்தைகள், 'ஹீரோ’த்தனமாகத் தெரியலாம், அல்லது, பைத்தியக்காரத்தனமாகத் தெரியலாம்.

"கண்ணுக்குக் கண்" என்று உலகத்தில் எல்லாரும் பழிவாங்கும் படலத்தில் இறங்கினால், உலகமே குருடாகிப்போகும் என்று காந்தியடிகள் சொன்னார். பழிக்குப் பழி வேண்டாம். சரி... அதற்கு அடுத்த நிலையை நாம் சிந்திக்கலாம் அல்லவா? காந்தியின் நண்பர் சார்லி சொல்வதுபோல், நமது தமிழ் பழமொழி சொல்லித் தருவதுபோல், "துஷ்டனைக் கண்டால், தூர விலகலாம்" அல்லவா?

துஷ்டனைக் கண்டு நாம் ஒதுங்கிப் போகும்போது, நமக்கு வந்த பிரச்சனை அப்போதைக்குத் தீர்ந்துவிடலாம். ஆனால், அப்பிரச்சனையின் பிறப்பிடமான அந்த ‘துஷ்டன்’ மாறும் வாய்ப்பை நாம் தரவில்லையே. அந்த வாய்ப்பைத் தருவது பற்றித்தான் இயேசு சொல்லித் தருகிறார். நமது மறுகன்னத்தைக் காட்டும்போது, நமது பகைவரிடமும் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பை நாம் உருவாக்குகிறோம் என்று இயேசு கூறுகிறார்.

பகைவரிடமும் மாற்றங்களைக் கொணரவேண்டும் என்ற எண்ணத்துடன், மறுகன்னத்தைக் காட்டும் பல உன்னத உள்ளங்கள் இன்றும் வாழ்கின்றனர். இவர்கள் ஆற்றும் உன்னதச் செயல்களில் நூற்றில் ஒன்று, அல்லது, ஆயிரத்தில் ஒன்று, என்றாவது, நமது செய்தித் தாள்களில், தொலைக்காட்சிகளில் இடம் பெறலாம். மற்றபடி நமது ஊடகங்கள் தரும் பெரும்பாலான செய்திகள், "கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்" செய்திகளே. கடந்த சில வாரங்களாக, தமிழக மக்களைத் தலைகுனிய வைத்திருக்கும் அரசியல் மோதல்களும், சபதங்களும், 'பழிக்குப் பழி' என்ற மந்திரத்தின் வெளிப்பாடுகள். இதே மந்திரம், அமெரிக்க ஐக்கிய நாடு, வட கொரியா, சிரியா, உட்பட, பல நாடுகளில் பல வழிகளில் வெளிப்படுவது, நம்மை வேதனையில் ஆழ்த்துகிறது. பழிக்குப் பழி என்று, மனித வரலாற்றை, இரத்தத்தில் எழுதுவோரைப்பற்றி, ஒரு சீனப் பழமொழி இவ்வாறு சொல்கிறது: "பழிக்குப் பழி வாங்க நினைப்பவர், இரு சவக் குழிகளைத் தோண்ட வேண்டும். ஒன்று மற்றவருக்கு, மற்றொன்று தனக்கு."

இவ்வுலகை, ஒரு கல்லறைக்காடாக மாற்றிவரும் பழிக்குப் பழி என்ற உலக மந்திரத்திற்கு எதிராக, இந்தியாவில் நடந்த ஒரு நிகழ்வு, அனைவர் மனதிலும் அழியாமல் பதிந்திருக்கும் என்பது, என் நம்பிக்கை. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, ஒடிஸ்ஸா மாநிலத்தில் பழங்குடியினரிடையே, குறிப்பாக, தொழுநோயாளர்கள் மத்தியில் உழைத்து வந்த Graham Staines என்ற கிறிஸ்தவப் போதகரையும், Philip, Timothy என்ற, அவரது இரு மகன்களையும் 1999ம் ஆண்டு சனவரி மாதம் உயிரோடு எரித்துக்கொன்ற தாரா சிங்கிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பை இரத்து செய்யுமாறு, கொல்லப்பட்ட போதகரின் மனைவி, Gladys Staines அவர்கள் கேட்டுக்கொண்டார் என்ற செய்தியை நாம் அறிவோம். “மன்னிப்பில் மட்டுமே நம்பிக்கை வளரும்” என்று Gladys அவர்கள் சொன்னதும் நமக்கு நினைவிருக்கலாம்.

மன்னிப்பதால், மறுகன்னத்தைக் காட்டுவதால் இவ்வுலகம் நம்பிக்கையில் வளரும் என்பதை அனைவரும் உணரும் நாள் விரைவில் வரவேண்டும் என்று மன்றாடுவோம். மறுகன்னத்தை நாம் காட்டும்போது, அக்கன்னத்தில் அறையும் நம் பகைவர்களின் மனங்களை மாற்றும் கனிவையும், துணிவையும் இறைவன் நமக்கு வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.