2017-02-18 14:52:00

பிலிப்பைன்சில் கொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்


பிப்.18,2017. பிலிப்பைன்ஸ் நாட்டில், போதைப்பொருள் தொடர்பான வன்முறையில், கடந்த ஜூலையிலிருந்து இதுவரை, 7,600க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளவேளை, இந்த வன்முறை முடிவுக்குக் கொண்டுவரப்படுமாறு, அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் சாக்ரடீஸ் வியேகாஸ் அவர்கள், மீண்டும் அரசிடம் விண்ணப்பித்துள்ளார்.

பண்பாடு உள்ள எந்த ஒரு நாடும், சட்டத்திற்குப் புறம்பே நடைபெறும் செயல்களை, ஒருபோதும் அனுமதிக்காது என்பதால், பிலிப்பைன்சில், கூட்டாக இடம்பெறும்கொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என, பேராயர் வியேகாஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

மணிலாவில், இச்சனிக்கிழமையன்று, நடந்த வாழ்வுக்கு ஆதரவான பேரணிக்குச் செய்தி அனுப்பிய, பேராயர் வியேகாஸ் அவர்கள், குற்றவாளிகள், சட்டத்தின் அடிப்படையில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட வேண்டுமேயொழிய, சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளால் அல்ல, எனக் கூறியுள்ளார்.

சட்டத்தை மீறுகின்றவர்கள், கைதுசெய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும், மரண தண்டனையை இரத்து செய்யும் சட்டத்தைக் காப்பதற்கு, அரசியல்வாதிகள், அமைச்சர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார், பேராயர் வியேகாஸ்.

மேலும், பிலிப்பைன்சின் Iloilo நகரில், Singles for Christ (SFC) என்ற அமைப்பு நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களும், வாழ்வுக்கு ஆதரவான பேரணியில் கலந்துகொண்டு, மனித வாழ்வு காக்கப்படுவதற்கு ஆதரவளித்தனர்.

இக்கருத்தரங்கில், குறைந்தது 21 நாடுகளிலிருந்து, 5,400க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்கின்றனர்.

ஆதாரம் : CBCP / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.