2017-02-16 15:40:00

வருகிற ஞாயிறு, Ponte di Nona பங்குக்கோவிலில் திருத்தந்தை


பிப்.16,2017. பிப்ரவரி 19, வருகிற ஞாயிறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரின் Ponte di Nona எனுமிடத்தில் உள்ள, இயேசுவின் திரு இருதய புனித மரிய யோசேப்பா பங்குக் கோவிலில் திருப்பலி நிறைவேற்ற செல்வார் என்று உரோம் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

ஞாயிறு மாலை 4 மணியளவில் அப்பங்குதளத்திற்குச் செல்லும் திருத்தந்தையை, கர்தினால் அகோஸ்தீனோ வல்லினி அவர்கள் வரவேற்றபின், திருத்தந்தை, அங்கு கூடிவரும் சிறுவர், சிறுமியர், இளையோர், மற்றும் நோயுற்றோரை, தனித்தனியே சந்திக்கிறார்.

பங்குக்கோவிலில் ஒரு சிலருக்கு ஒப்புரவு அருளடையாளம் வழங்கியபின், திருத்தந்தை, அங்கு ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றுகிறார்.

இதே பங்குத்தளத்திற்கு, 2001ம் ஆண்டு, டிசம்பர் 16ம் தேதி, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள் வருகை தந்தபோது, அவர் வழங்கிய ஒரு சிலுவை, கோவிலின் பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றபின், உரோம் மறைமாவட்டத்தின் 12 பங்குகளைச் சேர்ந்த மக்களை இதுவரை சந்தித்துள்ளார் என்பதும், 2017ம் ஆண்டு, திருத்தந்தை மேற்கொள்ளும் இரண்டாவது பங்கு சந்திப்பு இது என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.