2017-02-14 15:44:00

C-9 கர்தினால்கள் அவை திருத்தந்தைக்கு விசுவாசம்


பிப்.14,2017. திருப்பீட தலைமையகச் சீர்திருத்தத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு ஆலோசனை வழங்கும், ஒன்பது கர்தினால்களைக் கொண்ட C-9 என்ற அவை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும், அவரின் அதிகாரப்பூர்வப் போதனைகளுக்கும், தனது பிரமாணிக்கத்தைத் தெரிவித்துள்ளது.

இத்திங்களன்று, வத்திக்கானில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முன்னிலையில், தனது 18வது கூட்டத்தைத் தொடங்கிய C-9 கர்தினால்கள் அவையில், முதலில் திருத்தந்தைக்கு வாழ்த்து தெரிவித்த பின்னர், இந்த அவையின் பணிகளுக்கு, திருத்தந்தை வழங்கிவரும் ஊக்கத்திற்கும், வழிகாட்டுதலுக்கும் நன்றி தெரிவித்தார், இந்த அவையின் ஒருங்கிணைப்பாளர், கர்தினால் ஆஸ்கார் ஆந்த்ரேஸ் ரொட்ரிக்கெஸ் மாராதியாகா.

திருப்பீட தலைமையகத்தின் அனைத்துக் கர்தினால்களுக்கும், 2016ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வழங்கிய கிறிஸ்மஸ் செய்திக்கும், அனைத்து உறுப்பினர்களின் சார்பாக நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார், கர்தினால் மாராதியாகா.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணிகளுக்கு, C-9 கர்தினால்கள் அவை, தன் முழு ஆதரவை வழங்குவதோடு, திருத்தந்தைக்கும், அவரின் அதிகாரப்பூர்வப் போதனைகளுக்கும் விசுவாசமாக இருப்பதாகவும் உறுதி கூறினார், கர்தினால் மாராதியாகா.

திருஅவையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிவரும் சீர்திருத்தப் பணிகளுக்கு எதிராக, அண்மையில், உரோம் நகரில் சில விளம்பரத் தட்டிகள் வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக, C-9 கர்தினால்கள் அவை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, தன் முழு விசுவாசத்தைத் தெரிவித்துள்ளது.

C-9 கர்தினால்கள் அவையின் இந்த 18வது கூட்டம், பிப்ரவரி 15, இப்புதனன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.