2017-01-31 14:59:00

பாசமுள்ள பார்வையில்- நான் பார்க்கவில்லை என்று நீ நினைத்தபோது


Mary Rita Schilke Korzan என்ற எழுத்தாளர், தன் அன்னைக்கு நன்றி கூறும் வகையில், 2004ம் ஆண்டு நூலொன்றை வெளியிட்டார். தன் குழந்தைப்பருவத்தில், அன்னை தன் மீது உருவாக்கியத் தாக்கத்தைப் பற்றி, அந்நூலில், ஒரு கவிதை வடித்துள்ளார். அந்தக் கவிதையின் தலைப்பு: “When You Thought I Wasn't Looking” - "நான் பார்க்கவில்லை என்று நீ நினைத்தபோது". சமூக வலைத்தளங்கள் வழியே பல்லாயிரம் உள்ளங்களைக் கவர்ந்த இந்தக் கவிதையின் தமிழாக்கம் இது:

நான் பார்க்கவில்லை என்று நீ நினைத்தபோது,

நான் வரைந்த  படம் ஒன்றை, குளிர்சாதன பெட்டியின் கதவில் ஒட்டிவைத்தாய்;

அடுத்தப்படத்தை வரையும் ஆசை எனக்கு ஏற்பட்டது.

நான் பார்க்கவில்லை என்று நீ நினைத்தபோது,

தெருவில் போன பூனைக்குட்டிக்கு உணவளித்தாய்;

மிருகங்களிடம் அன்பாக இருப்பது நல்லதெனக் கற்றுக்கொண்டேன்.

நான் பார்க்கவில்லை என்று நீ நினைத்தபோது,

எனக்குப் பிடித்த 'கேக்' செய்தாய்;

சின்ன, சின்ன விடயங்கள் போதும், அன்பை வெளிப்படுத்த, என்பதைத் தெரிந்துகொண்டேன்.

நான் பார்க்கவில்லை என்று நீ நினைத்தபோது,

நீ செபம் சொன்னாய்;

கடவுள் இருக்கிறார், அவரிடம் எந்நேரமும் பேசலாம் என்பதை நம்பினேன்.

நான் பார்க்கவில்லை என்று நீ நினைத்தபோது,

நீ கண்ணீர் வடித்தாய்;

துன்பமும், கண்ணீரும், வாழ்வில் வருவது இயல்பு என்பதைப் புரிந்துகொண்டேன்.

நான் பார்க்கவில்லை என்று நீ நினைத்தபோது,

நான் பார்த்துக்கொண்டிருந்தேன்...

நான் பார்க்கவில்லை என்று நினைத்துக்கொண்டு

நீ செய்த அனைத்திற்காகவும் நன்றி, அம்மா...

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.