Mary Rita Schilke Korzan என்ற எழுத்தாளர், தன் அன்னைக்கு நன்றி கூறும் வகையில், 2004ம் ஆண்டு நூலொன்றை வெளியிட்டார். தன் குழந்தைப்பருவத்தில், அன்னை தன் மீது உருவாக்கியத் தாக்கத்தைப் பற்றி, அந்நூலில், ஒரு கவிதை வடித்துள்ளார். அந்தக் கவிதையின் தலைப்பு: “When You Thought I Wasn't Looking” - "நான் பார்க்கவில்லை என்று நீ நினைத்தபோது". சமூக வலைத்தளங்கள் வழியே பல்லாயிரம் உள்ளங்களைக் கவர்ந்த இந்தக் கவிதையின் தமிழாக்கம் இது:
நான் பார்க்கவில்லை என்று நீ நினைத்தபோது,
நான் வரைந்த படம் ஒன்றை, குளிர்சாதன பெட்டியின் கதவில் ஒட்டிவைத்தாய்;
அடுத்தப்படத்தை வரையும் ஆசை எனக்கு ஏற்பட்டது.
நான் பார்க்கவில்லை என்று நீ நினைத்தபோது,
தெருவில் போன பூனைக்குட்டிக்கு உணவளித்தாய்;
மிருகங்களிடம் அன்பாக இருப்பது நல்லதெனக் கற்றுக்கொண்டேன்.
நான் பார்க்கவில்லை என்று நீ நினைத்தபோது,
எனக்குப் பிடித்த 'கேக்' செய்தாய்;
சின்ன, சின்ன விடயங்கள் போதும், அன்பை வெளிப்படுத்த, என்பதைத் தெரிந்துகொண்டேன்.
நான் பார்க்கவில்லை என்று நீ நினைத்தபோது,
நீ செபம் சொன்னாய்;
கடவுள் இருக்கிறார், அவரிடம் எந்நேரமும் பேசலாம் என்பதை நம்பினேன்.
நான் பார்க்கவில்லை என்று நீ நினைத்தபோது,
நீ கண்ணீர் வடித்தாய்;
துன்பமும், கண்ணீரும், வாழ்வில் வருவது இயல்பு என்பதைப் புரிந்துகொண்டேன்.
நான் பார்க்கவில்லை என்று நீ நினைத்தபோது,
நான் பார்த்துக்கொண்டிருந்தேன்...
நான் பார்க்கவில்லை என்று நினைத்துக்கொண்டு
நீ செய்த அனைத்திற்காகவும் நன்றி, அம்மா...
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |