2017-01-28 15:42:00

நேபாள பெண்ணுரிமை ஆர்வலர் அனுராதா கொய்ராலாவுக்கு பத்மஸ்ரீ


சன.28,2017. பாலியல் தொழில் மற்றும், மனித வர்த்தகத்திலிருந்து, நூற்றுக்கணக்கான பெண்களைக் காப்பாற்றியுள்ள நேபாள பெண்ணுரிமை ஆர்வலர், அனுராதா கொய்ராலா அவர்களுக்கு, இந்திய அரசின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான, பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின், நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருது, அனுராதா கொய்ராலா அவர்களுக்கு வழங்கப்படுவது குறித்து, தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள, காத்மண்ட் நகரிலுள்ள இந்தியத் தூதரகம், அனுராதா கொய்ராலா அவர்களின் மிகச் சிறந்த சமூகநலப் பணிக்காக இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது எனவும், 2017ம் ஆண்டின் பத்மஸ்ரீ விருது வழங்கப்படும் ஒரே வெளிநாட்டவர் இவர் எனவும் தெரிவித்துள்ளது.

1993ம் ஆண்டில், Maiti Nepal என்ற அரசு-சாரா அமைப்பை உருவாக்கி, பாலியல் தொழிலுக்கு உள்ளாகும் பெண்களை மீட்டு, அவர்களுக்கு வாழ்வு கொடுத்து வருகிறார், அனுராதா கொய்ராலா.

ஒவ்வோர் ஆண்டும், குறைந்தது ஐந்தாயிரம் நேபாள சிறுமிகளும், பெண்களும், இந்தியா மற்றும், அரபு நாடுகளில், பாலியல் தொழிலில் கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றனர் என்று செய்திகள் கூறுகின்றன.   

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.