2017-01-25 14:54:00

பாசமுள்ள பார்வையில்… தாயென்ற வார்த்தையே, தனி இன்பம்தான்


தாய் என்று எண்ணினாலே அங்கு இனிமையான ஒரு சூழல்தான் பரவி நிற்கும்.

எத்தனைமுறை நம் வாழ்வில் தாய்மீது எரிச்சல்பட்டிருப்போம்,

ஆனால், ஒருமுறையாவது, அந்தத் தாய் நம்மீது எரிச்சல்பட்டிருப்பார்களா?'

ஆம். பாசத்தைக் கொட்டிக் கொட்டியே வேண்டுமானால், எரிச்சலூட்டியிருப்பார்கள்.

அது அம்மாவால் மட்டுமே முடியும்.

சாப்பிடு, சாப்பிடு என நிலவொளியில் அம்மாவிடம் சோற்று உருண்டை வாங்கிச் சாப்பிட்ட கடைசி தலைமுறை, நிச்சயமாக நாமாகத்தான் இருக்க முடியும்.

௭வ்வளவோ தப்பு செய்தாலும், தண்டனையற்ற நீதி கிடைக்கிற ஒரே நீதிமன்றம் அம்மாதான்.

தூரமான இடத்தில் வாழும் தன் மகனைப் பற்றிப் பேசும்பொழுதெல்லம், தாய்கள் பயன்படுத்தும் ஆற்றாமை மந்திரம் இதுதான், "எம்புள்ள பசி தாங்காது!"

எத்தனை முறை கணவர்கள் தங்கள் மனைவியிடம், 'என்ன இருந்தாலும் எங்க அம்மா சமையல் மாதிரி இல்லை' என்று சொல்லி, திட்டு வாங்கியிருப்பார்கள்.

மனைவிக்குக் கோபம் வரும் எனத் தெரிந்திருந்தும், அவர்களால் பழைய நினைவுகளை அகற்ற முடியவில்லை என்றுதானே அர்த்தம்.

வீட்டுக்கு வந்த மருமகள், தன்னை அம்மா என அழைக்கும்போது, அந்த மாமியார் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சிக்கு அளவு என்பது இல்லை.

தன் குழந்தையைப் பார்த்து, கிராமத்து தந்தை, 'என்ன தாயி, சாப்பிட்டியா தாயி' என்று கேட்கும்போது இருக்கும் பாசம், வேறு எதில் இருக்கிறது?.

தாய் என்ற வார்த்தை, தருவதே தனி இன்பம்தான், அதை வர்ணிக்க, எந்த மொழியிலும் வார்த்தையில்லை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.