2017-01-24 15:45:00

திருத்தந்தையின் பிப்ரவரி, மார்ச் மாதத் திருவழிபாடுகள்


சன.24,2017. “நற்செய்தியின் நியதிகள் நிறைந்த கதைகளை, நம் காலத்தின் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வழங்குவோம்” என்பது திருத்தந்தையின் இச்செவ்வாய் தின டுவிட்டர் செய்தியாக இருந்தது.

மேலும், வருகிற பிப்ரவரி, மார்ச் மாதங்களில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நிறைவேற்றும் திருவழிபாடுகள் குறித்த விபரங்களை, திருத்தந்தையின் திருவழிபாடுகளுக்குப் பொறுப்பான, பேரருள்திரு குய்தோ மரினி அவர்கள், இச்செவ்வாயன்று வெளியிட்டார்.

ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழாவாகிய பிப்ரவரி 2ம் தேதி வியாழன் மாலை 5.30 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், இருபால் துறவியருக்கு, திருப்பலி நிறைவேற்றுவார், திருத்தந்தை பிரான்சிஸ். அன்றைய நாள், 21வது உலக துறவியர் தினமாகும்.

மேலும், மார்ச் முதல் தேதி திருநீற்றுப் புதனன்று, மாலை 4.30 மணிக்கு, உரோம், புனித ஆன்செல்ம் ஆலயத்திலிருந்து தவப்பவனியாகச் சென்று, புனித சபீனா பசிலிக்காவில் மாலை 5.00 மணிக்கு திருப்பலி நிறைவேற்றுவார் திருத்தந்தை.

மார்ச் 5ம் தேதி தவக்கால முதல் ஞாயிறன்று, அரிச்சாவில், திருப்பீடத் தலைமையக அதிகாரிகளுடன் ஆண்டுத் தியானத்தைத் தொடங்கும் திருத்தந்தை, மார்ச் 10, வெள்ளியன்று, இந்த ஆண்டு தியானத்தை நிறைவு செய்வார் என, பேரருள்திரு குய்தோ மரினி அவர்கள் வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.