2017-01-07 15:12:00

திருக்காட்சிப் பெருவிழா - ஞாயிறு சிந்தனை


பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் கலந்துகொண்ட ஒரு விருந்தில், இறையியல் ஆசிரியரும், எழுத்தாளருமான அருள்பணி Ron Rolheiser அவர்கள், அணுவியல் அறிவியலாளர் ஒருவரிடம், "ஏனையக் கோளங்களில் மனித உயிர்கள் உள்ளன என்பதை நம்புகிறீர்களா?" என்று கேட்டார். அந்த அறிவியலாளர் தந்த பதில் இதுதான்: "ஏனையக் கோளங்களில் மனித உயிர்கள் உள்ளன என்பதை, ஓர் அறிவியலாளராக, நான் நம்பத் தயாராக இல்லை. ஆனால், ஒரு கிறிஸ்தவன் என்ற முறையில், இதை நம்ப விரும்புகிறேன். அதற்கு நான் சொல்லும் காரணம் இதுதான்: இறைவன், ஏன் ஒரே ஒரு குழந்தையை மட்டும் உருவாக்க முடிவெடுக்கவேண்டும்?" அந்த அறிவியலாளர் தந்த பதில், தன்னை வியப்பில் ஆழ்த்தியதுடன், இறைவனைப்பற்றிய ஒரு திருவெளிப்பாடாகவும் அமைந்தது என்று, அருள்பணி Ron Rolheiser அவர்கள், கூறியுள்ளார்.

இறைவன், ஏன் ஒரே ஒரு குழந்தையை மட்டும் உருவாக்க முடிவெடுக்கவேண்டும்? என்பது, நம்மைச் சிந்திக்க அழைக்கும் கேள்வி. உலகையும், மனிதர்களையும் உருவாக்கியத்துடன், இறைவன், தன் படைப்பை நிறுத்திக் கொண்டாரா? எல்லைகள் ஏதுமற்ற இறைவனால், அவ்விதம் நிறுத்திக்கொள்ளத்தான் இயலுமா?

நாம் வாழும் இந்தப் பூமிக்கோளத்தைத் தாண்டி, இன்னும் பல்லாயிரம், பல கோடி பூமிக்கோளங்கள் உள்ளன; அவற்றில் நம்மைப் போன்றவர்கள் வாழ்கின்றனர் என்ற பரந்து, விரிந்த எண்ணம், இறைவனுக்கு நாம் வகுக்கும் எல்லைகளை உடைக்கும் சுதந்திரத்தைத் தருகிறது. அத்தகைய ஒரு சுதந்திரத்தை அனுபவிக்க, இன்றைய ஞாயிறு நமக்கு வாய்ப்பளிக்கிறது. எல்லைகள் ஏதுமற்ற இறைவனை, மனிதர்கள் உருவாக்கிய சிறு, சிறு கட்டங்களுக்குள் பூட்டிவிடாமல், இறைவனை, இறைவனாகவேத் தொழுவதற்கு, இந்த ஞாயிறன்று நாம் கொண்டாடும் திருநாள், அழைக்கிறது.

இன்று நாம் கொண்டாடும், மூன்று அரசர், அல்லது, மூன்று ஞானிகள் திருநாள், இறைவன் தன்னை அனைத்து மக்களுக்கும் வெளிப்படுத்திய திருக்காட்சிப் பெருவிழா எனவும் அழைக்கப்படுகிறது. இறைவன் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று உரிமை கொண்டாடிவந்த இஸ்ரயேல் குலத்தவருக்கு, இந்தத் திருநாளும், இதில் பொதிந்திருக்கும் உண்மையும், அதிர்ச்சியைத் தந்திருக்கும்.

இறைவன் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர். இந்த இறைவனைப் பங்குபோட்டு, பிரித்து, அதனால், மக்களையும் பிரிக்கும் பல எண்ணங்கள் தவறானவை என்பதைச் சுட்டிக்காட்டும் விழா, இந்தத் திருக்காட்சித் திருநாள்.

நாம் வாழும் இன்றைய உலகில், கடவுளின் பெயரால், பிரிவுகளையும் பிளவுகளையும் உருவாக்கி, வன்முறைகளை வளர்க்கும் பல அடிப்படைவாதக் குழுக்கள், தங்கள் தவறுகளை உணர்ந்து, மனமாற்றம் பெறவேண்டுமென மன்றாடுவோம். மதங்களையும், இனங்களையும், சாதிகளையும் மூலதனமாக்கி, மக்களைப் பிரித்து, ஆதாயம் தேடிவரும் அரசியல் தலைவர்களின் சுயநல விளையாட்டை, மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்று செபிப்போம்.

இந்த மூன்று ஞானிகள் இயேசுவைச் சந்திக்க வந்த இந்த நிகழ்வை, பல கோணங்களில் நாம் சிந்திக்கலாம். விண்மீன்களின் ஒளியில் இந்த ஞானிகள் வழி நடந்தனர் என்றும்,. இறைவனைச் சந்தித்தபின் இவர்கள் வேறு வழியாகச் சென்றனர் என்றும் நற்செய்தி சொல்கிறது. மேலும், இந்த ஞானிகளை, "கிழக்கிலிருந்து வந்த ஞானிகள்" என்று, இன்றைய நற்செய்தி அறிமுகம் செய்கிறது. இந்த ஞானிகள், இந்தியாவிலிருந்து, ஆசியாவிலிருந்து வந்தவர்கள் என்பதும், கோள்களையும், நட்சத்திரங்களையும் ஆய்ந்து அறிந்தவர்கள் என்பதும், ஒரு சில விவிலிய ஆய்வாளர்களின் கருத்து.

இந்தியாவிலும், இன்னும் பல ஆசிய நாடுகளிலும் கோள்களை, நட்சத்திரங்களை அடிப்படையாகக்கொண்டு, வாழ்வின் பல முடிவுகள் எடுக்கப்படுவதை நினைத்துப்பார்க்கலாம். திரைப்படங்கள், விளையாட்டு, அரசியல் ஆகிய உலகங்களில் உருவாகும் 'ஸ்டார்களையும்', நம் ஜாதகத்தில், கைரேகைகளில் பதிந்துவிட்ட 'நட்சத்திரங்களையும்' நம்பி வாழாமல், நல்வழிகாட்டும் இறை நம்பிக்கை, பிறரன்பு என்ற விண்மீன்களை நாம் பின்பற்றவேண்டும் என்பது, இந்த விழா நமக்குச் சொல்லித்தரும் அழகியப் பாடம்.

விண்மீன், இரவில் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். பகலில் தெரியாது. எனவே, இந்த ஞானிகள், இரவில் தங்கள் பயணத்தை, அதிகம் செய்திருக்கவேண்டும். போக்குவரத்து வசதிகள் ஏதுமற்ற அக்காலத்தில், இரவில் மேற்கொள்ளும் பயணங்கள் எளிதல்ல. பல இரவுகளில் மேகங்களும், பனிமூட்டமும் அந்த விண்மீனை மறைத்திருக்கும். அந்நேரங்களில், மேகமும், பனியும் விலகும்வரைக் காத்திருந்து, மீண்டும் விண்மீனைப் அவர்கள் பின்தொடர்ந்திருக்கவேண்டும். இத்தனை இடர்பாடுகள் மத்தியிலும், ஒரே குறிக்கோளுடன், தொலைதூரம் பயணம் செய்த அந்த ஞானிகளின் மன உறுதி, நமக்கெல்லாம் நல்லதொரு பாடம்.

சனவரி 6, இவ்வெள்ளியன்று, வத்திக்கானில், திருக்காட்சிப் பெருவிழா கொண்டாடப்பட்டது. அவ்வேளையில், புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஞானிகள் விண்மீனைக் கண்டு பயணம் மேற்கொண்டதைப்பற்றி, தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்: "வானில் தோன்றிய ஓர் அற்புதம், பல நிகழ்வுகளைத் துவக்கி வைத்தது. அந்த விண்மீன், ஞானிகளுக்கு மட்டும் தோன்றவில்லை, அல்லது, அந்த விண்மீனைக் காணும் தனிப்பட்ட DNA சக்தியை ஞானிகள்மட்டும் பெற்றிருக்கவில்லை. திருஅவையின் தந்தையர்களில் ஒருவர் கூறுவது இதுதான்: விண்மீனைக் கண்டதால் அவர்கள் தங்கள் பயணத்தைத் துவக்கவில்லை; மாறாக, அவர்கள் ஏற்கனவே இறைவனை நோக்கி தங்கள் பயணத்தை துவங்கியிருந்ததால், அவர்கள் விண்மீனைக் கண்டனர் (புனித ஜான் கிறிஸ்தோத்தம்)."

நாம் வாழும் அவசர உலகில், விண்மீன்களைப் பார்ப்பது, மிகவும் அரிது. வானத்தை நிமிர்ந்து பார்க்கக்கூட நமக்கு இப்போது நேரமில்லை. எப்போது வானத்தைப் பார்ப்போம்? கருமேகம் சூழும்போது, "ஒருவேளை மழை வருமோ?" என்ற சந்தேகப் பார்வையோடு வானத்தைப் பார்ப்போம். அதேபோல், உள்ளத்தில் கருமேகங்கள் சூழும் போதும், மீண்டும் வானத்தைச் சந்தேகத்தோடு பார்க்கிறோம், கடவுள் என்ற ஒருவர் அங்கிருக்கிறாரா என்பதைத் தெரிந்துகொள்ள!

சந்தேகம் வரும்போது மட்டும் வானத்தைப் பார்த்தால், அங்கே கருமேகங்கள் மட்டுமே தெரியும். அந்தக் கருமேகங்களுக்குப் பின், கண்சிமிட்டும் விண்மீன்கள் தெரியாது. அந்த விண்மீன்கள் விடுக்கும் அழைப்பும் நமக்குக் கிடைக்காது. கருமேகங்களைத் தாண்டி, விண்மீன்களைப் பார்ப்பதற்கு, நம் முகத்தில் உள்ள கண்கள் பயனற்றவை. அகக்கண்கள் தேவை. இதயத்தின் கண்களைத் திறந்து பார்த்தால், இந்த உலகில் பல அதிசயங்களைப் பார்க்கமுடியும். அந்த அதிசயங்களின் ஊற்றான இறைவனையும் பார்க்கமுடியும். இதைத்தான் கீழ்த்திசை ஞானிகள் மூவர் இன்று நமக்குச் சொல்லித் தருகின்றனர்.

இந்த மூன்று ஞானிகளை, பாரம்பரியமாக, மூன்று அரசர்கள் என்றும் அழைக்கிறோம். அரசர் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, இன்றைய நற்செய்தி (மத்தேயு 2:1-12) நான்கு அரசர்களைப் பற்றி கூறுகிறது. ஆம், இந்த மூன்று அரசர்களுடன், நாம், ஏரோது அரசனையும் இணைத்துப் பார்க்கிறோம். இவர்கள் நால்வரும், இயேசுவைத் தேடினார்கள். விண்மீன் வழிநடத்த, தொலைதூரம் பயணம் செய்த மூன்று அரசர்கள், சுயநலம் மிக்க உள்நோக்கமும் எதுவும் இல்லாமல், இயேசுவை, உண்மையிலேயேத் தேடினர். இயேசுவைக் கண்டதும், தங்களையே அர்ப்பணம் செய்யும் அடையாளமாக, அக்குழந்தையின் காலடியில் காணிக்கைகளைச் சமர்ப்பித்தனர். பின்னர், வேறுவழியில் தங்கள் நாடுகளுக்குத் திரும்பினர். இந்த நிகழ்வுக்குப் பின், அவர்களைப்பற்றி விவிலியத்தில் எந்தத் தகவலும் இல்லை. திரும்பிச்சென்ற வழியில், ஏதோ, காற்றோடு காற்றாக அவர்கள் கரைந்துவிட்டதைப் போல் தெரிகிறது.

இறைவனைத் தேடி, கண்டுபிடித்து, அவரை உண்மையாகவேச் சந்தித்த பலரது நிலை இதுதான். எருசலேம் கோவிலில் குழந்தை இயேசுவைக் கையிலேந்திய முதியவர் சிமியோன், இயேசுவைக் கண்டதால் உண்டான மகிழ்வுடன் இவ்வுலகிலிருந்து விடைபெற விரும்பினார். (லூக்கா 2:25-32) இயேசுவின் முன்னோடியான திருமுழுக்கு யோவானின் நிலையும், (யோவான் 3:30) “இனி வாழ்பவன் நான் அல்ல: கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்” (கலாத்தியர் 2:20) என்று முழங்கிய புனித பவுலின் நிலையும், இதைப் போன்றதே.  இறைவனை உண்மையிலேயேக் கண்டு, நிறைவடைந்த அனைவருமே தங்கள் வாழ்வை அவரிடம் அர்ப்பணித்துவிட்டு மறைவதையே விரும்புவர். இந்த அழகியப் பாடத்தை மூன்று அரசர்கள் நமக்குச் சொல்லித் தருகின்றனர்.

இதற்கு நேர்மாறாக, நான்காவது அரசன் ஏரோதுவின் செயல்பாடுகள் அமைந்தன. அவனும் இயேசுவைத் தேடினான். எதற்காக? அவரைக் கொல்வதற்காக. அவனது தேடுதல், வெறியாக மாறி, பல நூறு பச்சிளம் குழந்தைகளை கொன்று குவிக்க வைத்தது. அவன், இயேசுவைவிட முக்கியமான ஒரு கடவுளைக் கண்டுவிட்டதாக நினைத்தான். அவனைப் பொருத்தவரை, அவனது அரியணையே அவன் வணங்கிய கடவுள். அரியணை என்ற அந்தக் கடவுளுக்கு, தன் மனைவியரையும், பிள்ளைகளையும் அவன் பலி கொடுத்தான் என்று சொல்லப்படுகிறது. இயேசுவையும் பலி கொடுக்க முயன்றான். ஏரோதின் வாழ்க்கை சொல்லித்தரும் எச்சரிக்கைப் பாடங்களையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

உண்மையான விண்மீன்களை அடையாளம் கண்டதால், அந்த விண்மீன் காட்டிய பாதையில் சென்று, இறைவனைக் கண்டதால், தங்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றியமைத்த ஞானிகளைப்போல், எத்தனையோ உன்னத உள்ளங்கள், தங்களையும், உலகத்தையும் மாற்றியிருக்கிறார்கள். தடைகள் பல வென்று, தீர்மானமாய் விண்மீன்களைத் தொடர்ந்து, இறைவனைக் கண்ட ஞானிகளைப் போல், இப்புத்தாண்டின் துவக்கத்தில், நாமும், இறைவனைக் காணமுயல்வோம். நாம் கண்ட இறைவன், நமக்குக் காட்டும் மாற்றுப்பாதையில், நம் வாழ்வுப் பயணத்தைக் தொடர துணிவு கொள்வோம். அவரிடம் மற்றவர்களை அழைத்துவரும் விண்மீன்களாய் மாறவும் தேவையான இறையருளை வேண்டுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.