2017-01-05 15:05:00

பாசமுள்ள பார்வையில்:தன்னுயிர் இழக்கத் தயாராகும் தியாகி,தாய்


ஒருசமயம், திரைப்படக் குழு ஒன்று, ஆப்ரிக்கக் காடு ஒன்றில், திரைப்படம் எடுப்பதற்கு, இடத்தை நிர்ணயம் செய்வதற்காகச் சென்றது. அப்போது அக்காட்டில் அக்குழு கண்ட காட்சி இது. அங்கு நடுக்காட்டில், ஓரிடத்தில், மான்கள் கூட்டம் ஒன்றை, செந்நாய்கள் துரத்திக்கொண்டு வந்தன. உடனடியாக எல்லா மான்களும், தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, தாறுமாறாக ஓடின. அப்போது, அந்த மான் கூட்டத்திலிருந்த ஒரு குட்டிமான், கால் இடறி, கீழே விழுந்து விட்டது. அதைப் பார்த்த செந்நாய்கள், அந்தக் குட்டிமானைச் சுற்றி வளைத்துக் கொண்டன. செய்வதறியாது திகைத்து, அச்சத்தால் நடுங்கிக் கொண்டிருந்தது குட்டிமான். செந்நாய்களும், மெல்ல மெல்ல, குட்டிமானை நெருங்கின. அச்சமயத்தில் எங்கிருந்தோ ஓடிவந்த குட்டிமானின் தாய், அதனருகில் சென்று அமைதியாக அமர்ந்துகொண்டது.

ஆம். தன் உயிரைப் பொருட்படுத்தாது, தன் குழந்தைக்காக, உயிரைத் தியாகம் செய்யத் துணிந்தது அந்தத் தாய்மான். தன்னலம் கருதாது, சேய்நலம் கருதும் தன்னலமற்ற தியாகத்தின் அடையாளம், தாய். தன்னை வருத்தி சேயை வளர்க்கும் இமயம், தாய். உடலில் உயிர் உள்ளவரை, ஒருபோதும் சேய்களை மறக்காதவர் தாய். இந்நிலவுலகில் நிகரற்ற புனித உறவு, தாயின் உறவு.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.