2017-01-03 15:49:00

பாசமுள்ள பார்வையில்... 'அப்படியே ஆகட்டும்'


1985... ஆப்ரிக்காவின் எத்தியோப்பியாவில் நிகழ்ந்துவந்த பட்டினிச்சாவுகள் மனித சமுதாயத்தின் மனசாட்சியை உலுக்கிக் கொண்டிருந்த நேரம் அது. மக்களின் பட்டினியைப் போக்க நிதி திரட்டும் எண்ணத்துடன், Live Aid என்ற இசை விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

உலகப் புகழ்பெற்ற பல இசைக்கலைஞர்கள் கலந்துகொண்ட அந்த இசை விழா, 1985ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி நடைபெற்றது. அந்த இசை நிகழ்ச்சி, செயற்கைக்கோள் வசதிகளுடன், உலகெங்கும், நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதுவரை, விளையாட்டுப் போட்டிகளும், திரைப்பட விழாக்களும் மட்டுமே, உலகின் பல நாடுகளில், நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்ததற்கு ஒரு மாற்றாக, மனிதாபிமானம் மிக்க ஒரு முயற்சி உலகெங்கும் நேரடி ஒளிபரப்பானது, இதுவே முதல்முறை என்று சொல்லப்படுகிறது. 150 நாடுகளில், 190 கோடிக்கும் மேற்பட்டோர், இந்த இசை நிகழ்ச்சியைக் கண்டனர் என்றும் சொல்லப்படுகிறது. இந்த இசை நிகழ்ச்சியால் திரட்டப்பட்ட 15 கோடி பவுண்டுகள், அதாவது, 1260 கோடி ரூபாய் நிதியுதவி, எத்தியோப்பியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உலகப் புகழ்பெற்ற Beatles என்ற பாடகர் குழுவில் ஒருவரான Paul McCartney என்பவர், இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். Live Aid என்ற இசை நிகழ்ச்சியில் அவர் பாடிய “Let It Be” என்ற பாடல், மரியன்னையுடன் தொடர்புடைய ஒரு பாடல். Paul McCartney அவர்கள் பாடிய “Let It Be” என்ற பாடலின் பொருள் "அப்படியே ஆகட்டும்". இப்பாடலின் முதல் வரிகள் இதோ:

"நான் பிரச்சனைகளைச் சந்திக்கும் வேளையில், அன்னை மரியா என்னிடம் வருகிறார்.

'அப்படியே ஆகட்டும்' என்ற அறிவு செறிந்த வார்த்தைகளைச் சொல்கிறார்.

என் வாழ்வை இருள் சூழும் நேரங்களில் அவர் எனக்கு முன் நிற்கிறார்.

'அப்படியே ஆகட்டும்' என்ற அறிவுசெறிந்த வார்த்தைகளை மென்மையாக என்னிடம் சொல்கிறார்." என்று இந்தப் பாடல் ஆரம்பமாகிறது.

“Let It Be” என்ற பாடலை தான் எழுதுவதற்குக் காரணம், தன் தாயே என்று, Paul McCartney அவர்கள், தன் பேட்டிகளில் கூறியுள்ளார். Paul McCartneyன் தாயின் பெயர் மேரி. ஆனால், பாடலின் வரிகளில் அவர் Mother Mary என்று எழுதியிருப்பது, பலர் மனதில் அன்னை மரியாவை நினைவுறுத்துகிறது. அதேபோல் “Let It Be” என்று அடிக்கடி இந்தப் பாடலில் இடம்பெறும் சொற்கள், மரியா, அன்று விண்ணகத்தூதர் கபிரியேலிடம், "உம சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்று சொன்ன அந்தப் புகழ்பெற்ற சொற்களை நினைவுறுத்துகின்றன. புகழ்பெற்ற இப்பாடலின் இன்னும் சில வரிகள் இதோ:

மனமுடைந்த மக்கள் மனமொத்து சேரும்போது,

அங்கு ஒரு விடை பிறக்கும் - 'அப்படியே ஆகட்டும்'.

இரவில் மேகம் சூழ்ந்தாலும், என் மீது ஒளி வீசுகிறது.

நாளைவரை வீசும் அந்த ஒளி சொல்வது - 'அப்படியே ஆகட்டும்'.

அன்னை மரியா என்னிடம் வருகிறார்.

'அப்படியே ஆகட்டும்' என்ற அறிவு செறிந்த வார்த்தைகளைச் சொல்கிறார்.

Live Aid இசை நிகழ்ச்சியில் இந்தப் பாடல் ஆழ்ந்ததொரு தாக்கத்தை உருவாக்கியது என்று சொன்னால், அது மிகையல்ல.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.