2016-12-30 14:55:00

2016ல் திருத்தந்தையின் நிகழ்வுகளில் ஏறக்குறைய 40 இலட்சம்


டிச.30,2016. 2016ம் ஆண்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றிய திருவழிபாடுகள் மற்றும் அவர், தலைமையேற்று நடத்திய பொது நிகழ்வுகளில், ஏறக்குறைய நாற்பது இலட்சம் பேர் கலந்துகொண்டனர் என்று, திருப்பீடம் அறிவித்துள்ளது.

திருப்பீட இல்ல நிர்வாகத் துறை வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின்படி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நிகழ்த்திய நிகழ்வுகளில், 39 இலட்சத்து, 52 ஆயிரத்து, 140 பேர் கலந்துகொண்டனர் எனத் தெரிகிறது.

இந்த எண்ணிக்கை, 2015ம் ஆண்டைவிட சற்று அதிகம் எனக்கூறும் அத்திருப்பீடத் துறை, 2016ம் ஆண்டில், திருத்தந்தை நிகழ்த்திய 43 புதன் பொது மறைக்கல்விப் போதகங்களில், 7 இலட்சத்து 62 ஆயிரம் பேரும், 11 சனிக்கிழமை யூபிலி பொது மறைக்கல்விப் போதகங்களில், 4 இலட்சத்து 46 ஆயிரம் பேரும் கலந்துகொண்டனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தை, குழுவாகச் சந்தித்த சிறப்புப் பொது நிகழ்வுகளில், ஒரு இலட்சத்து 69 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களும், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயம் அல்லது வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றிய திருவழிபாடுகளில், 9 இலட்சத்து 24 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களும் கலந்துகொண்டனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தையின் பொது சந்திப்புக்களை ஒருங்கிணைத்து நடத்துகின்ற மற்றும், திருத்தந்தை தலைமையேற்று நடத்தும் நிகழ்வுகளுக்கு, இலவசமாக அனுமதிச் சீட்டுக்களை வழங்குகின்ற திருப்பீட இல்ல நிர்வாகத் துறை, ஒவ்வோர் ஆண்டின் இறுதியில், இந்தப் புள்ளி விபரங்களை வெளியிடுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.