டிச.26,2016. இந்துக்களின் புனித நகரான வாரணாசியில் ஒன்று கூடிய இந்து, இஸ்லாம், சீக்கிய, ஜெயின் மற்றும் கிறிஸ்தவப் பிரதிநிதிகள், தங்கள் மத விழாக்களை ஒன்று கூடி ஒரே நாளில் சிறப்பித்து, வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இயேசுவின் பிறப்பையும், மிலாடி நபியையும், 10வது சீக்கிய குருவின் பிறப்பையும், 23வது ஜெயின் குருவின் பிறப்பையும், இந்து அறுவடைத் திருவிழாவையும் இணைந்து கொண்டாடிய இந்த ஐந்து மதங்களின் பிரதிநிதிகள், மதங்களிடையே ஒத்துழைப்புக்கும், அமைதிக்கும், இணக்க வாழ்வுக்கும் இத்தகையக் கொண்டாட்டங்கள் உதவுகின்றன என்றனர்.
இந்த பல்சமயக் கூட்டத்தில் அனைத்து மதங்களின் பாடல்களுடன், கிறிஸ்மஸ் கீதங்களும் இசைக்கப்பட்டன.
அன்பின் துணைகொண்டு இவ்வுலகையே ஒப்புரவாக்குவதற்கு ஒரு நல்ல வாய்ப்பைத் தருவதே கிறிஸ்மஸ் விழாவின் நோக்கம் என, இக்கூட்டத்தில் உரை வழங்கினார், கத்தோலிக்கர்கள் சார்பில் பங்குபெற்ற அருள்பணி அனில்தேவ்.
அனைவரும் ஒன்றிணைந்து இணக்க வாழ்வை மேற்கொள்ளவேண்டியதன் முக்கியத்துவம், இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து மதத்தினராலும் வலியுறுத்தப்பட்டது.
ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |