2016-12-17 13:55:00

திருவருகைக்காலச் சிந்தனை - கனவுகளைத் தொடர்வது, பரிசு


சுயநலனைக் கடந்து, அடுத்தவர் நலனை முன்னிறுத்துவோர் உள்ளங்களில் கனவுகள் தோன்றும்; அக்கனவுகள், செயல்வடிவமும் பெறும் என்பதை, புனித யோசேப்புவின் வாழ்வு நமக்கு உணர்த்துகிறது. இன்றைய நற்செய்தியை பின்புலமாக வைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் டிசம்பர் 15 இவ்வியாழனன்று சில கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். உரோம் நகரில், குழந்தைகள் நலனுக்கென இயங்கிவரும் புகழ்பெற்ற ‘குழந்தை இயேசு மருத்துவமனை’யைச் சேர்ந்த மருத்துவர்கள், பணியாளர்கள், நோயுற்ற குழந்தைகள், அவர்களது குடும்பத்தினர், மருத்துவமனைக்கு உதவிகள் செய்வோர் என்று, ஏறத்தாழ 7000 பேரை, இவ்வியாழன் காலை, அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தில் திருத்தந்தை சந்தித்தபோது, கனவுகளைப் பற்றி இவ்வாறு பேசினார்: "கனவுகளை, உயிர் துடிப்புடன் வாழவைக்க வேண்டும். கனவுகளுக்கு மயக்கமருந்து கொடுக்கக்கூடாது" என்று கூறியத் திருத்தந்தை, இஞ்ஞாயிறு நற்செய்தி வழியே கனவுகள் பற்றிய பாடங்களை, இறைவன் நமக்குச் சொல்லித் தருகிறார் என்று தொடர்ந்தார்:

"கனவுகள் கடினமாக இருந்தாலும், அவற்றை நனவாக்க, நடைமுறை வாழ்வாக்க, இறைவன் அழைக்கிறார். இறைவன் நம் ஒவ்வொருவரையும் குறித்து கனவு காண்கிறார். கனவுகள் இல்லாத வாழ்க்கை, கடவுளுக்கு உகந்த வாழ்க்கை அல்ல. உற்சாகமற்ற, சோர்ந்துபோன வாழ்வு, கிறிஸ்தவ வாழ்வு அல்ல" என்று வலியுறுத்திக் கூறியத் திருத்தந்தை, கனவுகளுடன் தொடர்புள்ள மற்றோர் அம்சத்தைக் குறித்தும் பேசினார்: "கனவுகளைத் தொடர்ந்து வருவது, பரிசு. வாழ்வில் இருவகை இலக்குகளை நாம் துரத்திச் செல்லமுடியும். ஒன்று, மேலும், மேலும் நமக்கென சேகரித்து வைத்துக் கொள்வது; மற்றொன்று, தருவது. ஒவ்வொருநாள் காலையிலும் வீட்டைவிட்டு வெளியேறும்போது, நமது உள்ளம் நம்மைச் சுற்றியே வட்டமிடுகிறதா, அல்லது, மற்றவர்களைச் சந்திப்பது, பிறருக்குத் தருவது என்ற திறந்த மனநிலையில் உள்ளதா?" என்ற கேள்வியை எழுப்பினார், திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.