2016-12-17 16:32:00

திருத்தந்தை, மால்ட்டா அரசுத்தலைவர் சந்திப்பு


டிச.17,2016. மால்ட்டா அரசுத்தலைவர் மரி லூயிஸ் பிரேக்கா(Marie Louise Coleiro Preca) அவர்கள், இச்சனிக்கிழமை காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 

ஏறக்குறைய இருபது நிமிடங்கள், திருத்தந்தையை தனியே சந்தித்து உரையாடிய பின்னர், தனது கணவர் Edgard, சில அமைச்சர்கள், அவர்களின் மனைவியர் ஆகியோரை திருத்தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்தார் மால்ட்டா அரசுத்தலைவர் பிரேக்கா.

ஒரு குடும்பம் போன்று நிகழ்ந்த இச்சந்திப்பில், திருத்தந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்தும், மால்ட்டாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களையும் பரிசாக அளித்தார் மால்ட்டா அரசுத்தலைவர் பிரேக்கா.

திருத்தந்தையும், அரசுத்தலைவர் பிரேக்கா அவர்களிடம்,  அமைதியைக் குறிக்கும் ஒரு பதக்கத்தை அளித்து, இந்த உலகம், அமைதியின் தோட்டமாக எப்போதும் மாற வேண்டும் என்றும் கூறினார். இன்னும், இறைவா உமக்கே புகழ்(Laudato si'), நற்செய்தியின் மகிழ்வு(Evangeli gaudium), அன்பின் மகிழ்வு(Amoris Laetitia) ஆகிய மூன்று திருத்தூது மடல்களையும், திருத்தந்தை மால்ட்டா அரசுத்தலைவருக்கு வழங்கினார். அப்போது, அரசுத்தலைவரின் கணவர், இம்மூன்றையும் தான் ஏற்கனவே வாசித்திருக்கிறேன் என்றும் திருத்தந்தையிடம் கூறினார்.

திருத்தந்தையைச் சந்தித்த பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்ளையும் சந்தித்து உரையாடினார், மால்ட்டா அரசுத்தலைவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.