2016-12-17 16:47:00

உலக புலம்பெயர்ந்தவர் நாள் டிசம்பர் 18


டிச.17,2016. உலகில் எல்லாரும், அமைதி, வளம் மற்றும், மாண்பைப் பெறுவதற்கு, புலம்பெயர்ந்தவர்களுக்குப் பாதுகாப்பும், மாண்பும், அளிக்கப்படுவது மிகவும் இன்றியமையாதது என்று, ஐ.நா. பொதுச் செயலர், பான் கி மூன் அவர்கள் கூறியுள்ளார்

டிசம்பர் 18, இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும், உலக புலம்பெயர்ந்தவர் நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள, பான் கி மூன் அவர்கள், புலம்பெயர்ந்தவர் மற்றும் குடிபெயர்ந்தவர்களின் துயர் துடைப்பதற்கு, பலர் முன்வந்திருப்பது நம்பிக்கையளிக்கின்றது என்று கூறியுள்ளார்

ஒவ்வொரு புலம்பெயர்ந்தவரும், மனித உரிமைகளைக் கொண்டிருக்கும் மனிதர் என்றும், எல்லாப் புலம்பெயர்ந்தவர்களின் மனித உரிமைகளையும், அடிப்படை சுதந்திரத்தையும் பாதுகாத்து, வளர்க்க வேண்டியது, நியூ யார்க் அறிக்கையின் அடிப்படைக் கூறாகும் என்றும், பான் கி மூன் அவர்கள் கூறியுள்ளார்.

நியூ யார்க் அறிக்கையை செயல்படுத்துவதற்கு, இந்த மக்களின் சொந்த நாடுகளிலிருந்தும், உலக அரசுகளிடமிருந்தும் ஒத்துழைப்பும், அர்ப்பணமும் அவசியம் என்றும், பான் கி மூன் அவர்களின் செய்தி கூறுகின்றது.

மேலும், பங்களாதேஷ் நாட்டின் டாக்காவில் இவ்வாரத்தில் நடந்து முடிந்த, புலம்பெயர்ந்தவர் குறித்த உலக மாநாட்டில், புலம்பெயர்ந்தவர்களை நிர்வகிப்பது குறித்த, உலகளாவிய ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்படுவதற்கு இசைவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 10 முதல் 12 வரை நடைபெற்ற இம்மாநாட்டில், 130 நாடுகளிலிருந்து, ஏறக்குறைய 600 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : UCAN/UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.