2016-12-16 16:44:00

சட்டத்திற்குப் புறம்பே இடம்பெறும் ஆயுத வர்த்தகத்தை ஒழிக்க...


டிச.16,2016. சட்டத்திற்குப் புறம்பே இடம்பெறும், மற்றும், குற்றவியல் தொடர்புடைய ஆயுத வர்த்தகத்தை ஒழிப்பதற்கு கடும் நடவடிக்கைகள் எடுப்பதே, பேரழிவுகளில் ஈடுபடுபவர்களைத் தடுப்பதற்கு அடிப்படையானது என்று, பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், ஐ.நா. பாதுகாப்பு அவையில் கூறினார்.

அரசுடன் எவ்விதத் தொடர்புமில்லாத, அதேநேரம், அரசியல் செல்வாக்கு மிக்க, தனியாட்களும், அமைப்புகளும், ஆயுதமேந்தி நடத்துகின்ற பேரழிவுகளைத் தடுப்பதற்கு, சரியான உலகளாவியச் சட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும், ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியான, பேராயர் அவுசா அவர்கள் கேட்டுக்கொண்டார்.

பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை, ஒரு குறிப்பிட்ட நாட்டுடன் அல்லது அரசுடன் தொடர்பில்லாத வன்முறை அமைப்புகள் பயன்படுத்துவதைத் தடைசெய்வது குறித்து, ஐ.நா.வில், இவ்வியாழனன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் பேசிய பேராயர் அவுசா அவர்கள், இந்த முக்கியமான தலைப்பு குறித்து, விவாதம் நடைபெறுவதற்கு, தனது நன்றியையும் தெரிவித்தார்.

இந்த வன்முறை அமைப்புகளிடமுள்ள ஆயுதங்களை ஒழிப்பதற்கு, பன்னாட்டு, மற்றும் தேசிய அளவில் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு வலியுறுத்திய பேராயர் அவுசா அவர்கள், ஆயுதப் பரவலைத் தடுப்பதற்கு, உலகளாவிய புதிய நன்னெறி விதிமுறைகள் அவசியம் என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.