2016-12-07 16:27:00

திருத்தந்தை - அக்கறையற்ற மனநிலையை அழகினால் வெல்க


டிச.07,2016. அக்கறையற்ற மனநிலையை உருவாக்கும் இவ்வுலகச் சூழலை, அழகின் ஒளிச் சிதறல்களால் எதிர்கொள்ளவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று வழங்கிய ஒரு செய்தியில் கூறியுள்ளார்.

வத்திக்கானில் இயங்கிவரும் 11 பாப்பிறைக் கழகங்களின் 21வது ஒருங்கிணைந்த கூட்டத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பிய ஒரு செய்தியை, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இச்செவ்வாய் மாலை, வாசித்தார்.

"அழகின் ஒளிச்சிதறல்களைக் கொண்டு, நமது நகரங்களுக்கு மனித முகத்தை வழங்குதல்" என்ற மையக் கருத்துடன், திருப்பீடக் கலாச்சார அவை ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டத்தை, இத்திருப்பீட அவையின் தலைவரும், பாப்பிறைக் கழகங்களின் ஒருங்கிணைப்பாளருமான கர்தினால் ஜியான் பிராங்கோ இரவாசி அவர்கள் வழிநடத்தினார்.

கலைகள் வழியே நாம் உருவாக்கும் அழகு, நமது தினசரி வாழ்வில் நாம் சந்திக்கும் இருளை வெல்வதற்கு உதவுகிறது என்று, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், பாப்பிறைக் கழகங்களுக்கு வழங்கிய உரையில் கூறியதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செய்தியில் நினைவு கூர்ந்துள்ளார்.

அவலங்கள் பல நிறைந்துள்ள இன்றைய நகரங்களில், அவற்றைக் குறித்த அக்கறையின்மையும் வளர்ந்து வருகிறது என்பதை, தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இத்தகைய நிலைக்கு ஒரு மாற்றாக, கலையும், அழகும் நம்மிடையே வளர்க்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நாம் மேற்கொள்ளும் சிறு செயல்கள், வெளிப்படுத்தும் சிறு அடையாளங்கள் வழியே, காயப்பட்டிருக்கும் நமது சமுதாயம், சுற்றுச்சூழல் இவற்றை குணமாக்கும் அழகையும், அன்பையும் வெளிப்படுத்த முடியும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

உலகில் நிகழும் அவலங்களை அதிகமாக வெளிச்சமிட்டுக் காட்டும் இன்றைய ஊடகத் துறைக்கு ஒரு மாற்று அடையாளமாக நமது கலைகள், இவ்வுலகில் நிலவும் அழகை வெளிச்சமிட்டுக் காட்டவேண்டும் என்று தன் செய்தியில் விண்ணப்பித்துள்ளார், திருத்தந்தை.

இசை, கவிதை ஆகிய துறைகளில் சிறந்த பணியாற்றிய முனைவர், Chiara Bertoglio மற்றும், முனைவர் Claudio Cianfaglioni ஆகிய இருவருக்கும் பாப்பிறைக் கழகத்தின் இவ்வாண்டு விருதையும், முனைவர் Michele Vannelli, மற்றும் Francesco Lorenzi ஆகியோருக்கு, பாப்பிறை பதக்கத்தையும் வழங்குவதாக, திருத்தந்தை தன் செய்தியின் இறுதியில் அறிவித்துள்ளார்.

அழகின் முழுமையான அன்னை மரியா, பாப்பிறைக் கழகங்கள் அனைத்தையும் பாதுகாத்து வழிநடத்த வேண்டும் என்ற ஆசீருடன், திருத்தந்தை தன் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.