2016-12-06 16:14:00

அணு அச்சுறுத்தல் இல்லாத உலகை அமைப்பதற்கு நடவடிக்கை


டிச.06,2016. அணு ஆயுதப் பரவலைத் தடுத்தல், அணு ஆயுதம் தொடர்பான குற்றங்களுக்கு எதிராகச் செயல்படுதல், இந்த ஆயுதங்கள் சட்டத்திற்குப் புறம்பே பயன்படுத்தப்படுவதை தடுத்தல் போன்ற அனைத்தையும், திருப்பீடம் மிக முக்கியமானதாகக் கருதுகின்றது என்று, திருப்பீட அதிகாரி ஒருவர் இத்திங்களன்று தெரிவித்தார்.

அணு அச்சுறுத்தல் இல்லாத உலகை அமைப்பது குறித்து, IAEA என்ற, உலக அணுசக்தி நிறுவனம், வியன்னாவில் நடத்திய கூட்டத்தில் உரையாற்றிய, பன்னாட்டு உறவுகள் திருப்பீட செயலகத்தின் நேரடிப் பொதுச் செயலர் பேரருள்திரு Antoine Camilleri அவர்கள், இவ்வாறு தெரிவித்தார்.     

அணு ஆயுதப் பரவலால் ஏற்பட்டுள்ள அச்சமும், நம்பிக்கையின்மையும், புதிய உலகளாவிய நன்னெறிமுறைகளால் களையப்படுமாறு விண்ணப்பித்த பேரருள்திரு Camilleri அவர்கள், அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு, திருப்பீடம், தொடர்ந்து தனது ஆதரவை வழங்குவதாகவும் உறுதி கூறினார்.

சமூக-பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் விதமாக, அணு ஆயுதங்கள், ஒழிக்கப்படுவதற்கு, மேலும் முயற்சிகள் தேவை என்றும் கூறினார் பேரருள்திரு Camilleri.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.