டிச.,05,2016. நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்து, நம்மை, புதுமனிதர்களாக உருவாக்கும் இயேசுவை நோக்கி நம் பார்வையை திருப்புவோம் என இத்திங்கள் காலை திருப்பலி மறையுரையில் அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
பாலவனத்தில் பூ பூக்கும், பார்வையற்றோர் காண்பர், செவித்திறனிழந்தோர் கேட்பர் என்ற இந்நாளின் முதல் வாசகம் குறித்து, சாந்தா மார்த்தா இல்ல சிற்றாலய திருப்பலியில் தன் மறையுரையைத் துவக்கியத் திருத்தந்தை, நல்லதை நோக்கிய இந்த மாற்றங்களை, மெசியாவோடு, இஸ்ராயேல் மக்கள் தொடர்புபடுத்திப் பார்த்தனர் என்றார்.
இயேசுவின் புதுப்பித்தல் என்பது, வெளித்தோற்றத்தை மாற்றியமைப்பது அல்ல, மாறாக, உள்மனதில் மாற்றத்தைக் கொணர்ந்து, அனைத்தையும் புதுப்படைப்பாக்குவது எனவும் கூறினார் திருத்தந்தை.
நம்மை மாற்றியமைக்கவோ, புதுப்படைப்பாக மாற்றவோ முடியாது என்ற எண்ணத்தைக் கைவிட்டு, நம்மை மாற்றியமைக்க உதவும் இயேசுவிடம் நம்மைக் கையளிப்போம் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்த திருத்தந்தை, நம் பாவங்களை அறிக்கையிட்டு, அவரிடம் கையளிக்கும்போது அவர் நம்மை புது மனிதராக்குகின்றார் என்றார்.
கிறிஸ்து பிறப்பு விழாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நாம், உறுதியுடனும் உண்மை விசுவாசத்துடனும் நடைபோடுவோம் எனவும், தன் மறையுரையில் அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |