2016-11-30 16:05:00

புனித அந்திரேயாவின் திருநாளில் கலந்துகொண்ட கர்தினால் கோக்


நவ.30,2016. "புனித அந்திரேயாவின் திருநாளன்று, உடன்பிறந்த அன்புடன், முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்களுடன் நெருங்கியிருக்கிறேன்; அவருக்காகவும், அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள திருஅவைக்காகவும் செபிக்கிறேன்" என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 30, இப்புதனன்று கொண்டாடப்பட்ட புனித அந்திரேயாவின் திருநாளில், தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.

மேலும், இத்திருநாளையொட்டி, கிறிஸ்தவ ஒன்றிப்பு வளர்ச்சி திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் கர்ட் கோக் அவர்கள் தலைமையில், வத்திக்கானிலிருந்து இஸ்தான்புல் சென்றுள்ள பிரதிநிதிகள் குழு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய செய்தியை, முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்களிடம் சமர்ப்பித்தது.

இத்திருநாளன்று, இஸ்தான்புல் புனித ஜார்ஜ் ஆலயத்தில், முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்கள் தலைமையேற்ற திருவழிபாட்டு நிகழ்வில், வத்திக்கான் பிரதிநிதிகளுடன் கலந்துகொண்ட கர்தினால் கோக் அவர்கள், இந்நிகழ்வின் இறுதியில் திருத்தந்தையின் செய்தியை வாசித்தார்.

ஜூன் மாதம் 29ம் தேதி கொண்டாடப்படும் புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவன்று, கிறிஸ்தவ ஒன்றிப்பு சபையின் பிரதிநிதிகள், உரோம் நகருக்கு வருகை தருவதும், நவம்பர் 30ம் தேதி கொண்டாடப்படும் புனித அந்திரேயா திருநாளன்று, கத்தோலிக்கத் திருஅவையின் பிரதிநிதிகள், கான்ஸ்டாண்டிநோபிள் செல்வதும் பல ஆண்டுகளாக நிலவிவரும் மரபு.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.