2016-11-26 15:45:00

இராட்சிங்கர் அறக்கட்டளை அமைப்பினருக்கு திருத்தந்தை உரை


நவ.26,2016. கத்தோலிக்க அருள்பணியாளர் Inos Biffi, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபைப் பேராசிரியர் Ioannis Kourempeles ஆகிய இருவருக்கும், 2016ம் ஆண்டின் ஜோசப் இராட்சிங்கர் விருதை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் நகரின் திருச்சிலுவை மற்றும் அகுஸ்தீனியானம் பல்கலைக்கழகங்களில், பன்னாட்டு கருத்தரங்கு ஒன்றை நடத்திய, இராட்சிங்கர் அறக்கட்டளை அமைப்பின் பிரதிநிதிகளை, இச்சனிக்கிழமையன்று, வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய பின்னர், இந்த அறக்கட்டளையின் விருதையும் வழங்கினார்.

தனது செபத்தினாலும், தோழமையாலும் நம்மோடு தொடர்ந்து பயணித்துவரும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை, நன்றியோடு  நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் சிந்தனைகள், திருவிவிலியம் மற்றும் திருஅவைத் தந்தையர் வாழ்வில் ஆழமாக   வேரூன்றியதாக உள்ளன என்றும் பாராட்டினார்.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் செபமும், விசுவாசமும், நாம், விண்ணகத்தை நோக்கி வாழ்வதற்கு உதவுகின்றன என்றும், இயேசு கிறிஸ்து, அன்பு, நம்பிக்கை, விசுவாசம் பற்றிய அவரின் சிந்தனைகளுக்கு, அகிலத் திருஅவையும் என்றும் நன்றியோடு உள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள ஜோசப் இராட்சிங்கர் அறக்கட்டளை அமைப்பு, நவம்பர் 24, இவ்வியாழன் முதல், 26 இச்சனிக்கிழமை முடிய, "இறுதி வருகை: பகுப்பாய்வும், கண்ணோட்டமும்" என்ற தலைப்பில் இக்கருத்தரங்கை நடத்தியது.

இறையியில் துறையில், சிறந்த முறையில் அறிவியல் ஆய்வு நடத்துபவர்களுக்கென, வழங்கப்படும் இராட்சிங்கர் விருது, 2011ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

பேரருள்திரு Inos Biffi அவர்கள், உலகளவில் புகழ்பெற்ற இறையியல் மற்றும் திருவழிபாட்டுப் பேராசிரியர் ஆவார். கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபையைச் சேர்ந்த Ioannis Kourempeles அவர்கள், கிரேக்க நாட்டின் தெசலோனிக்கி அரிஸ்டாட்டில் பல்கலைக்கழகத்தின் இறையியல் துறை இணைப் பேராசிரியர் ஆவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.