நவ.25,2016. அனைத்து மக்களும், மற்றவரோடு பகிர்ந்து, அவர்களோடு நெருக்கமாக வாழ்வதிலும், உறவுகளைக் கட்டியெழுப்புவதிலும் அகமகிழுமாறு, அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியின் வெரோனாவில், நடைபெற்றுவரும், திருஅவை சமூகக் கோட்பாட்டின் ஆறாவது விழாவில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளுக்கு, காணொளிச் செய்தி வழியாகப் பேசியுள்ள திருத்தந்தை, இவ்வாறு விண்ணப்பித்துள்ளார்.
மக்கள் மத்தியில் வாழ்வதில் மகிழ்வு காணும்போது, நாம் கொடுப்பதைவிட, பெறுவதில் அதிகம் பலனடைவதை, ஆழமாக உணருவோம் என்று, அச்செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை, மக்கள் மத்தியில் வாழும்போது, வாழ்வின் படிப்பினைகளை, நாம் புரிந்துகொள்ளத் தொடங்குவோம் என்றும் பேசியுள்ளார்.
மக்கள் மத்தியில், உண்மையான மனித வளமும், ஒருமைப்பாட்டுணர்வின் எண்ணற்ற கதைகளும் இருக்கின்றன என்றும், இவை, நம் குடும்பங்கள் மற்றும் சமுதாயங்களுக்கு உதவியும், ஆதரவும் வழங்குகின்றன என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.
“மக்கள் மத்தியில்” என்ற தலைப்பில், நவம்பர் 24, இவ்வியாழனன்று தொடங்கியுள்ள இவ்விழா, வருகிற ஞாயிறன்று நிறைவடையும்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |